புயல் எச்சரிக்கையால் ஆழ்கடலில் தவித்த குமரி மீனவர்கள் வெளி மாநிலங்களில் கரைசேர ஏற்பாடு: 3500 பேர் பாதுகாப்புடன் கரை ஒதுங்கினர்

புயல் எச்சரிக்கையால் ஆழ்கடலில் தவித்த குமரி மீனவர்கள் வெளி மாநிலங்களில் கரைசேர ஏற்பாடு: 3500 பேர் பாதுகாப்புடன் கரை ஒதுங்கினர்
Updated on
1 min read

புரெவி புயல் எச்சரிக்கையால் ஆழ்கடலில் இருந்து கரை திரும்ப முடியாமல் தவித்த குமரி மீனவர்கள் வெளிமாநிலங்களில் கரை ஒதுங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புடன் கரை ஒதங்கியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து விசைப்படகுகளில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் புரெவி புயல் எச்சரிக்கையை தொடர்ந்து கரை திரும்பினர்.

இதில் தகவல் தொடர்பு கிடைக்காமல் 161 விசைப்படகுகளில் மீனவர்கள் தவித்து வந்தனர். இவர்கள் கேரளா, லட்சத்தீவு, மகராஸ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

இவர்களை சேட்டிலைட் போன் உதவியுடன் இந்திய கடற்படையினர் தொடர்பு கொண்டு வெளிமாநில கடல் பகுதியில் மீன்பிடித்து வரும் அந்தந்த இடங்களில் உள்ள துறைமுகங்களிலேயே கரைதிரும்புமாறு வலியுறுத்தினர்.

இதுகுறித்து பிற மாநில துறைமுக அதிகாரிகள், மீன்வளத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குமரி விசைப்படகு மீனவர்கள் படகுகளுடன் லட்சத்தீவு, குஜராத், மகராஸ்டிரா துறைமுகங்களில் பாதுகாப்புன் கரை சேர்ந்துள்ளனர்.

ஏற்கெனவே விசைப்படகுகளில் கரை சேர்ந்த மீனவர்கள், தற்போது சென்றவர்கள் என 3500க்கும் மேற்பட்ட மீனவர்கள் வெளிமாநில துறைமுகங்களில் கரை சேர்ந்துள்ளனர்.

மேலும் ஆழ்கடலில் இருக்கும் விசைப்படகுகளில் மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்களும் அருகில் உள்ள துறைமுகங்களில் கரைஒதுங்குவதற்கு சென்று கொண்டிருப்பதாகவும், இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் குமரி மீன்வளத்துறையினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in