Published : 03 Dec 2020 02:17 PM
Last Updated : 03 Dec 2020 02:17 PM

அரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம்: இப்ப இல்லைன்னா எப்பவும் இல்லை: ரஜினி பேச்சு

படங்கள்: ம.பிரபு.

சென்னை

தன்னுடைய உயிரே போனாலும் பரவாயில்லை. மக்களுக்காக உழைப்பேன். மாற்று அரசியல் வேண்டும், ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதற்காகத்தான் கட்டாயம் அரசியல் கட்சி தொடங்க உள்ளேன். ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவேன் என்று ரஜினி அறிவித்துள்ளார்.

தமிழருவி மணியனை மேற்பார்வையாளராக ரஜினி நியமித்துள்ளார்.

சென்னை போயஸ் இல்லத்தில் இன்று ரஜினி அளித்த பேட்டி:

''சட்டப்பேரவைத் தேர்தல் வரும்போது, தேர்தலுக்கு முன்னால் கட்சி ஆரம்பிப்பேன். 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று சொல்லியிருந்தேன். அதற்குப் பின்னர் மார்ச்சில் லீலா பேலஸ் கூட்டத்தில் சந்திக்கும்போது, மக்கள் மத்தியில் எழுச்சி வர வேண்டும். அந்த எழுச்சியை உண்டாக்க வேண்டும். எழுச்சி வந்தபிறகுதான் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தேன்.

அதற்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யலாம் என்று இருந்தேன். கரோனா காரணமாக என்னால் செய்ய முடியவில்லை. எனக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடந்திருப்பது உங்களுக்குத் தெரியும். நிறைய பேருக்குத் தெரிந்திருக்காது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்துதான் உறுப்பு மாற்று சிகிச்சை அளிப்பார்கள். ஆனால், கரோனாவால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்க வேண்டும். அதுதான் பெரிய பிரச்சினை.

நீங்கள் கரோனா தொற்று நேரத்தில் மக்களிடம் சென்று பிரச்சாரம் செய்தால் அவர்களுக்குச் சேவை செய்வது மருத்துவ ரீதியாகக் கட்டாயம் ஆபத்து என்று மருத்துவர்கள் சொன்னார்கள். நான் பிரச்சாரம் செய்ய சிந்தித்ததற்குக் காரணம், நான் சிங்கப்பூரில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோது தமிழ் மக்களின் பிரார்த்தனைதான் என்னைப் பிழைக்க வைத்தது.

தற்போது அவர்களுக்காக என் உயிரே போனாலும் என்னைவிட சந்தோஷப்படுவது யாரும் இருக்க முடியாது. நான் கொடுத்த வாக்கை நான் என்றுமே மீற மாட்டேன். ஒரு அரசியல் மாற்றம் ரொம்பக் கட்டாயம். காலத்தின் தேவை ரொம்ப முக்கியம். மாற்ற வேண்டும். அனைத்தையும் மாற்ற வேண்டும். அரசியல் மாற்றம் வந்தே ஆக வேண்டும்.

இப்ப இல்லைன்னா எப்பவும் இல்லை. அதை மக்கள்தான் முடிவு பண்ண வேண்டும். நான் வருவேன் அந்த மாற்றத்தை நீங்கள்தான் உருவாக்க வேண்டும்.

நான் வெற்றி அடைந்தாலும் அது உங்களுடைய வெற்றி. தோல்வி அடைந்தாலும் அது மக்களின் தோல்வி. 'அண்ணாத்த' ஷூட்டிங் 40% முடிக்க வேண்டியுள்ளது. அதை முடிப்பது என் கடமை. அதை முடிக்க வேண்டும்.

தற்போது எழுந்துள்ள சூழ்நிலையில் தமிழருவி மணியன் பல காலகட்டத்தில் என் மீது எவ்வளவோ விமர்சனம் வந்தபோதும் என்னைக் கைவிடவில்லை. அவரை மேற்பார்வையாளராக நியமித்துள்ளேன்.

இன்னொருவர் ஆர்.அர்ஜுனமூர்த்தி. இவர் கிடைத்ததும் என் பாக்கியம். ஆகவே, கடினமாக வேலை செய்து என்னால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்து வெற்றியடைவேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு தலையெழுத்து இருப்பதுபோல் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தலையெழுத்து உண்டு. தமிழ்நாட்டின் தலை எழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்தாச்சு. நிச்சயம் அது நடக்கும். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம். இப்ப இல்லைன்னா எப்பவும் இல்லை. மாற்றுவோம். எல்லாவற்றையும் மாற்றுவோம்''.

இவ்வாறு ரஜினி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x