

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே சென்னை தொழிலதிபர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்தவர் கணேஷ்குமார் ரியல் எஸ்டேட் உட்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். அவருடைய மற்றொரு கிளை நிறுவனம் மதுரையில் உள்ளது.
தொழிலில் பரபரப்பாக இருந்த கணேஷ்குமாரை பாராட்டி விருது வழங்க உள்ளதாகக் கூறி கொடைரோட்டில் உள்ள தனியார் மண்டபத்திற்கு வரவேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு விழா குழுவினர் கணேஷ் குமாருக்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளனர்.
அழைப்பிதழில் உள்ளதுபோல் கொடை ரோட்டுக்கு விருது வாங்க கணேஷ்குமார் வந்துள்ளார்.
அப்போது கொடைரோட்டில் இருந்த ஒரு மர்ம கும்பல் கணேஷ்குமாரை கடத்திச் சென்றுள்ளது. விருது வாங்கச் சென்றவர் திரும்பி வராததால் நிறுவன ஊழியர்கள் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமையிலான தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த வேலையில் கணேஷ் குமாரின் மதுரை நிறுவன அலுவலகத்திற்கு ஒரு செல்போன் அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசியவர் ணேஷ்குமார் கடத்தப்பட்டு தங்கள் பிடியில் இருப்பதாகவும் ரூபாய் 10 லட்சம் கொடுத்தால்தான் கணேஷ்குமாரை விடுவிக்க முடியும் எனவும் மதுரை அலுவலகத்திற்கு வரும் தங்கள் கூட்டாளிகள் இரண்டு பேரிடம் பணத்தை ஒப்படைத்த உடன் கணேஷ்குமார் விடுவிப்பதாகவும் இல்லை என்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
தகவல் அறிந்த தனிப்படை போலீஸார் மிரட்டல் விடுத்த செல்போன் நம்பரை ஆய்வு செய்தபோது அது ஈரோட்டில் இருப்பது தெரியவந்தது. கணேஷ்குமார் பத்திரமாக உயிருடன் மீட்க நடவடிக்கை மேற்கொண்ட போலீஸார் மதுரை ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்கு வந்த கடத்தல்காரர்கள் அனுப்பிய இரண்டு இளைஞர்களிடம் எந்த ஒரு எதிர்ப்பும் காட்டாமல் ரூ.10 லட்சத்தை கொடுக்க வைத்தனர்.
அந்த இளைஞர்கள் 2 பேரும் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஈரோட்டில் உள்ள கடத்தல்காரர்களுக்கு தகவல் சொல்லவே அங்கிருந்து கணேஷ்குமார் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கணேஷ்குமார் கடத்தல்காரர்களின் பிடியிலிருந்து வெளியே வந்துவிட்டார் என்பதை உறுதி செய்து கொண்ட போலீஸார். பணத்தைப் பெற்றுக் கொண்டு மதுரையிலிருந்து இருச்சக்கர வாகனத்தில் சிவகங்கை சாலையில் சென்றுகொண்டிருந்த அந்த இரண்டு வாலிபர்களையும் சினிமா பாணியில் துரத்திப் பிடித்தனர்.
அவர்களிடம் இருந்து ரூபாய் 10 லட்சத்தில் மீட்டனர். விசாரணையில் அவர்கள் இருவரும் சிவகங்கை சேர்ந்த அஜித்குமார் மற்றும் காளையர் கோவிலை சேர்ந்த மருது மலர்மன்னன் எனக்கு தெரியவந்தது இருவரையும் கைது செய்த அம்மையநாயக்கனூர் போலீஸார் நிலக்கோட்டை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விருதுநகர் சிறையில் அடைத்தனர்.
ஈரோட்டில் இருந்து தப்பியோடிய கடத்தல் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் கடத்தப்பட்ட தொழிலதிபர் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது