கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து புதிய கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பேன்: மு.க.அழகிரி பேட்டி

கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து புதிய கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பேன்: மு.க.அழகிரி பேட்டி
Updated on
1 min read

கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து புதிய கட்சி தொடங்குவது குறித்து விரைவில் அறிவிப்பேன் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மதுரை வில்லாபுரம் பகுதியில் அண்மையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த திமுக நிர்வாகி நல்லமருதுவின் வீட்டிற்குச் சென்றார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.

அங்கு தொண்டரின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் எனது பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் . இம்மாதம் நடைபெறும் கட்சி நிர்வாகிகளுடனான கூட்டத்தில் ஆலோசித்து புதிய கட்சி தொடங்குவது குறித்து எனது முடிவை அறிவிப்பேன்" என்றார்.

தயாநிதிக்கு திமுகவில் முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளதாக வரும் தகவல் குறித்த கேள்விக்கு, வதந்திகளுக்கு எதுவும் பதில் கூற முடியாது. அமித்ஷாவை நான் சந்திக்க போவதாக கூறிய வதந்தி போல தான் இந்த செய்தியும் என்று கூறினார்.

கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர் திமுகவில் இணைய அழகிரி தரப்பில் மேற்கொள்ளப்பட்ட அத்தனை முயற்சிகளும் பலனளிக்காமல் போன நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

அண்மையில் அமித் ஷா வருகையை ஒட்டி அழகிரியின் அரசியல் பிரவேசப் பேச்சு மீண்டும் சலசலக்கப்பட்டது. அவர் ரஜினியுடன் இணைவார் என்றெல்லாம் ஊகங்களின் அடிப்படையில் பேசப்பட்டது.

இந்நிலையில், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக அழகிரியே தனிக்கட்சிப் பற்றி பேசியிருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in