

ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்று உள்ளோரும் நம்மில் ஒருவரே என்பதை மனதில் கொண்டு, அவர்களையும் மனிதநேயத்துடன் அரவணைத்து ஆதரிக்க வேண்டும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவ.30) வெளியிட்ட அறிக்கை:
"மக்களிடையே ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1-ம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலக எய்ட்ஸ் தினத்தின் மையக் கருத்து 'உலகளாவிய ஒற்றுமை, பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளுதல்' ஆகும்.
ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் நோய் தொற்றினைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு அரசால் தனிக் கவனம் செலுத்தப்பட்டதன் காரணமாக, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி தமிழ்நாட்டில் ஹெச்.ஐ.வி தொற்றின் சதவீதம் 2010-11 ஆம் ஆண்டு 0.38 சதவீதத்திலிருந்து 2019 ஆம் ஆண்டு 0.18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய ஹெச்.ஐ.வி தொற்றினைக் கண்டறிய 3,161 நம்பிக்கை மையங்கள் மற்றும் 16 நடமாடும் நம்பிக்கை மைய வாகனங்களைக் கொண்டு ஹெச்.ஐ.வி தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் 216 பால்வினை நோய்த் தொற்று சிகிச்சை மையங்களின் மூலமாக சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 55 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும், 174 இணை கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும் செயல்பட்டு வருகின்றன.
ஹெச்.ஐ.வி தொற்றுள்ள பெற்றோரிடம் இருந்து கருவிலுள்ள குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுக்க அனைத்து கருவுற்ற பெண்களுக்கும் சிறப்பு மருத்துவ சிகிச்சை மாவட்டந்தோறும் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயல்படும் நம்பிக்கை மையம் மற்றும் கூட்டு மருந்து சிகிச்சை மையங்களில் அளிக்கப்படுகிறது.
ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் உயரிய நோக்கில், தமிழக அரசு அவர்களுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்குதல், ஹெச்.ஐ.வி தொற்று பாதிக்கப்பட்ட கணவரை இழந்த இளம் பெண்களுக்கு வயது வரம்பைத் தளர்த்தி மாத ஓய்வூதியம் வழங்குதல், ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்றுள்ளோர் சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றுவர கட்டணமில்லாப் பேருந்துப் பயண அட்டை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
மேலும், ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு, சிகிச்சை, பராமரிப்பு மற்றும் தொடர் சேவைகள் கிடைக்கப் பெற இளைப்பாறுதல் மையம் என்னும் திட்டத்திற்காக 2.41 கோடி ரூபாய் நிதியுதவியுடன் மாநிலம் முழுவதும் சுமார் 34 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, இந்த நிதியாண்டு முதல் (2020-2021) செயல்பட்டு வருகிறது.
ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, தமிழ்நாட்டில் ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்று, ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்று உள்ளோரும் நம்மில் ஒருவரே என்பதை மனதில் கொண்டு, அவர்களையும் மனிதநேயத்துடன் அரவணைத்து ஆதரிக்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.