நிவர் புயலால் வீழ்ந்த 102 மரங்கள் அகற்றம்: சென்னை போலீஸாரின் நிவாரணப் பணி

நிவர் புயலால் வீழ்ந்த 102 மரங்கள் அகற்றம்: சென்னை போலீஸாரின் நிவாரணப் பணி
Updated on
2 min read

சென்னையில் பலத்த மழை காரணமாக விழுந்த 102 மரங்களை சென்னை பெருநகர காவல்துறை ஆளிநர்கள், இதர அரசுத் துறை ஊழியர்களுடன் ஒருங்கிணைந்து அப்புறப்படுத்தினர்.

இதுகுறித்து சென்னை காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக நிவர் புயல் உருவாகியுள்ளதால், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் அதிக அளவு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., உத்தரவின்பேரில், சென்னைவாழ் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடவும், அவர்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் அவசர தேவைக்கென உதவிடவும் சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக பொதுமக்களின் அழைப்புகளுக்கு உடனடியாகச் சென்று உதவிட ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் ஆளிநர்கள் மூலம் 12 இடர் மீட்புக் குழுவினர், ரப்பர் படகுகள், கயிறுகள், காற்றடைத்த ட்யூப்கள், டார்ச் லைட், கடப்பாரை, சவுல் போன்ற இடர் மீட்பு உபகரணங்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிரமாக கண்காணித்து, எவ்வித அசம்பாவிதமும் நிகழாவண்ணம் ரோந்து சுற்றியும், அங்குள்ள பொதுமக்களுக்கு வேண்டிய உதவிகள் செய்து வருகின்றனர்.

பொதுமக்கள் நிவர் புயல் தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறையின் உதவியை நாட, காவல் ஆணையரகத்தில் உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக கட்டுப்பாட்டறை தொடங்கப்பட்டு, கட்டுப்பாட்டறை எண் 94981 81239க்கு தொடர்புகொண்டு காவல்துறையின் உதவியைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாக கடந்த 24.11.2020 முதல் சென்னையில் பெய்து வரும் பெரும் மழை காரணமாக பல சாலைகளில் தேங்கியுள்ள மழைநீர் போலீஸார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து சரிசெய்து, சீரான போக்குவரத்துக்கு வழிவகுத்து வருகின்றனர். எங்கேனும் சாலைகளில் தேங்கிய மழைநீரில் பெரிய பள்ளம் இருந்தாலோ அல்லது இடர்ப்பாடுகள் தெரிந்தாலோ அங்கு பேரிகார்டு தடுப்புகள் கொண்டு எச்சரிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், சென்னையில் பெருமழை காரணமாக கடந்த 24.11.2020 முதல் இன்று (26.11.2020) காலை 8 மணி வரையில் வடபழனி, விருகம்பாக்கம், கோடம்பாக்கம், அசோக்நகர், பெரவள்ளூர், எழும்பூர், அபிராமபுரம், யானைகவுனி, கொடுங்கையூர், கொருக்குப்பேட்டை, வளசரவாக்கம், கொரட்டூர், நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், சூளைமேடு, மயிலாப்பூர், வேப்பேரி, அரும்பாக்கம் மணலி, கோடம்பாக்கம், ராயப்பேட்டை, புழல், மாதவரம், திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை, அண்ணாசதுக்கம், அமைந்தகரை, நந்தம்பாக்கம் உட்பட 80 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் விழுந்த 102 பெரிய மரங்கள் சென்னை பெருநகர போலீஸார் மற்றும் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து அப்புறப்படுத்தினர்.

மரங்கள் விழுந்ததில் 7 கார்கள் மற்றும் 2 ஆட்டோக்கள் சேதமடைந்துள்ளன”.

இவ்வாறு சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in