பலத்த மழை முன்னெச்சரிக்கை; வீராணம் ஏரியில் தண்ணீர் குறைப்பு

வீராணம் ஏரி
வீராணம் ஏரி
Updated on
1 min read

பலத்த மழை முன்னெச்சரிக்கையாக வீராணம் ஏரியில் தண்ணீர் குறைக்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி ஆகும். இதன் மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதியில் உள்ள 44 ஆயிரத்து 586 ஏக்கர் விளைநிலம் பாசனம் பெறுகிறது. இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு தொடர்ந்து குடிநீருக்காக தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

நிவர் புயலால் கடலூர் மாவட்டத்தில் பலத்த காற்றும், கன மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 நாட்களாக வீராணம் ஏரியில் தண்ணீரை குறைக்கும் நடவடிக்கையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது வீராணம் ஏரியின் நீர் மட்டம் 44.85 அடி உள்ளது. கீழணையிலிருந்து வடவாறு வழியாக ஏரிக்கு விநாடிக்கு 2,000 கன அடியும், காட்டாறுகள் மூலம் விநாடிக்கு 150 கன அடியும் தண்ணீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. வீராணம் ஏரியின் வடிகால் மதகான விஎன்எஸ்எஸ் வழியாக விநாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் வெள்ளாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னைக்கு விநாடிக்கு 50 கன அடியும் விவசாய பாசனத்துக்கு விநாடிக்கு 10 கன அடியும் திறந்து விடப்பட்டுள்ளது.

வீராணம் ஏரியின் வடிகால் மதகான விஎன்எஸ்எஸ் வழியா தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
வீராணம் ஏரியின் வடிகால் மதகான விஎன்எஸ்எஸ் வழியா தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

வெள்ளாற்றில் ஏரி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஏரியின் நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதனால் பலத்த மழை பெய்தாலும் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் வெள்ள அபாயம் தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கீழணை, வீராணம் ஏரி ஆகிய பகுதிகளில் சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ், உதவி செயற்பொறியாளர்கள் சிதம்பரம் பாலமுருகன், அணைக்கரை அருணகிரி மற்றும் உதவி பொறியாளர்கள், ஊழியர்கள் கொண்ட குழுவினர் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in