

காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. அகமது படேல் கடந்த அக்டோபர் 1-ம் தேதி கரோனா தொற்றா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், தொற்றிலிருந்து அவர் முழுமையாக குணமடையவில்லை.
இந்நிலையில், குர்கோவனில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்பு அகமது படேல் சிகிச்சைக்காக திடீரென அனுமதிக்கப்பட்டார்.
தொடக்கத்தில் அகமது படேல் உடல்நிலை சீராக இருந்தது. மருத்துவர்கள் கண்காணிப்பில் அகமது படேல் தொடர்ந்து இருந்து வந்தார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அகமது படேலின் நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பாதிப்பு மற்ற உடல் உறுப்புகளுக்கும் பரவியதால்தான் அவரின் உடல்நிலை மோசமடைந்தது.
இந்தநிலையில், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இன்று (நவ. 25) அதிகாலை அவர் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான அகமது படேல் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கும் திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.