டிவி சீரியல் நடிகர் கொலையில் நண்பர் கைது

செல்வரத்தினம், விஜயகுமார்.
செல்வரத்தினம், விஜயகுமார்.
Updated on
1 min read

சென்னை, எம்ஜிஆர் நகரில் டிவி சீரியல் நடிகர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவரது நண்பரை போலீஸார் விருதுநகரில் கைது செய்தனர். சீரியல் நடிகர், தன் மனைவியுடன் கூடா நட்பு வைத்திருந்ததால், ஆத்திரத்தில் நண்பரே கொன்றது அம்பலமாகியுள்ளது.

விருதுநகரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்தவர் செல்வரத்தினம் (41). இவரது நண்பர் விஜயகுமார் (36). இவரும் இலங்கையைச் சேர்ந்தவர். இருவரும் நண்பர்கள். நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட செல்வரத்தினம் சென்னைக்கு வந்தார். சின்னதிரையில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர், முன்னணி சேனலின் தொலைக்காட்சித் தொடரில் நடித்து வந்தார்.

சென்னை எம்ஜிஆர் நகரில் தங்கியிருந்த செல்வரத்தினம் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார். இந்நிலையில் தீபாவளிக்கு மறுநாள் அதிகாலையில் செல்வரத்தினம், அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த எம்ஜிஆர் நகர் போலீஸார் கொலை செய்த நபரைத் தேடி வந்தனர்.

கொலை செய்த நபர் ஆட்டோவில் வந்ததும், அவர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்துவிட்டுச் சென்றதும் தெரியவந்தது.

ஆட்டோவின் பதிவெண்ணை வைத்துத் தேடிய போலீஸார், ஆட்டோ ஓட்டுநர் மூலம் அந்த நபரின் அடையாளத்தைக் கண்டறிந்தனர்.

கொலை செய்யப்பட்ட செல்வரத்தினம், செல்போனில் ஒரு பெண்ணுடன் அடிக்கடி பேசியதைக் கண்டறிந்தனர். அந்த எண்ணை போலீஸார் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் விஜயகுமாரின் மனைவி எனத் தெரியவந்தது.

பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில், கொலை செய்த நபர் செல்வரத்தினத்தின் நண்பர் விஜயகுமார் எனத் தெரியவந்தது. போலீஸார் நடத்திய விசாரணையில் விஜயகுமாரின் மனைவிக்கும், செல்வரத்தினத்துக்கும் கூடா நட்பு இருந்ததும், அது தொடர்ந்ததும், அதனால் ஆத்திரத்தில் இருந்த விஜயகுமார் அதைக் கண்டித்ததும் தெரியவந்தது.

தீபாவளிக்கு முந்தைய நாள் சென்னைக்கு வந்த விஜயகுமார் நேராக எம்ஜிஆர் நகர் வந்துள்ளார். அங்கு நண்பர் செல்வரத்தினத்தை வெளியில் அழைத்து, அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு மீண்டும் விருதுநகர் திரும்பியுள்ளார். இதை விசாரணையில் கண்டுபிடித்த தனிப்படை போலீஸார் விஜயகுமாரை விருதுநகர் சென்று கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

தனது மனைவியுடன் தன் நண்பர் செல்வரத்தினம் கூடா நட்பு வைத்திருந்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in