பாலாற்றங்கரையோரம் புதைந்துள்ள பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள்; அகழ்வு பணியை தொடங்க 4 ஆண்டாக போராடும் வரலாற்று ஆர்வலர்கள்: முதல்வர் அறிவிப்புக்கு பிறகாவது வேகமெடுக்குமா?

பாலூர் அருகே உள்ள சாஸ்திரம்பாக்கத்தில் பெருங்கற்கால மக்கள் இறந்தவர்களை புதைத்த முதுமக்கள் தாழி மற்றும் அதன் மேல் வைக்கப்பட்டுள்ள கல்பதுக்கைகள்.
பாலூர் அருகே உள்ள சாஸ்திரம்பாக்கத்தில் பெருங்கற்கால மக்கள் இறந்தவர்களை புதைத்த முதுமக்கள் தாழி மற்றும் அதன் மேல் வைக்கப்பட்டுள்ள கல்பதுக்கைகள்.
Updated on
1 min read

பாலாற்றங்கரையோரம் பல்வேறு கிராமங்களில் பெருங்கற்கால மக்களின் நாகரிகம் சார்ந்த பல நினைவுச் சின்னங்கள் புதைந்து கிடக்கின்றன. இப்பகுதியில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற வேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள் 4 ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் நிலையில் முதல்வர் அறிவிப்புக்கு பிறகாவது இப்பகுதியில் ஆய்வு நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஆற்றங்கரைகளில்தான் மனிதநாகரிகங்கள் தோன்றி வளர்ந்தன. தென் மாவட்டங்களில் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி மூலம் தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்தை அறிந்துகொள்ள முடிந்தது. அதேபோல் மதுரை கீழடியிலும் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதுபோல் வடமாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பாலாற்றங்கரையோரம் பல்வேறு நினைவுச் சின்னங்கள் உள்ளன. குறிப்பாக பாலூர் அருகே உள்ள சாஸ்திரம்பாக்கம், பழவேரி, புலிப்பாக்கம், பினாயூர் போன்ற இடங்களில் பெருங்கற்கால மக்களின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் பல்வேறு நினைவுச் சின்னங்கள் உள்ளன. இந்த 4 கிராமங்களில் முதுமக்கள் தாழிகள், கற்பதுக்கைகள் ஆகியவை அதிகம் காணப்படுகின்றன. இவை 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என்றுவரலாற்று ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தென்மாவட்டங்களில் நடைபெறுவது போன்ற தொல்லியல்ஆய்வுகள் இந்த பாலாற்றங்கரையில் நடைபெறாதது வரலாற்று ஆர்வலர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாஸ்திரம்பாக்கத்தில் முதுமக்கள் தாழி, கற்பதுக்கைகளுடன், கற்கால மக்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள், மருந்து அரைக்கும் உரல்கள் போன்றவை காணப்படுகின்றன. இந்த முதுமக்கள் தாழிகளில்6 அடி முதல் 15 அடிவரை உள்ள ஒரு குடுவை போன்ற வடிவத்தில் இறந்தவரின் உடலோடு அவர்பயன்படுத்திய பொருட்களையும்வைத்து பூமிக்கடியில் புதைத்துள்ளனர். இதுபோல் எண்ணற்ற நினைவுச் சின்னங்கள் இந்தப் பகுதிகளில் புதைந்துள்ளன.

இதுகுறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று தமிழர் தொன்மம் வரலாற்று ஆய்வு மையம் சார்பில்தொல்லியல் துறைக்கும், மாவட்டநிர்வாகங்களுக்கும் மனு அளித்தனர்.

இதுகுறித்து தமிழர் தொன்மம்வரலாற்று ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளர் வெற்றித்தமிழன் கூறும்போது, "தொல்லியல் துறை அலுவலர் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்பிப்பார் என்று ஜனவரி மாதம் அந்த துறையின் செயலர் மூலம்அறிவிக்கப்பட்டிருந்தது. முதல்வரும் கடந்த நவம்பர் மாதம் ‘தொல்லியல் ஆய்வுகள் வடமாவட்டங்களில் நடைபெறும்' என்று தெரிவித்திருந்தார். ஆனால், பாலாற்றங்கரை நாகரிகம் தொடர்பான ஆய்வுகள் நடத்துவதற்கான ஆரம்பகட்டநடவடிக்கைகள் கூட எடுக்கப்படவில்லை. இதனால் அந்த நினைவுச் சின்னங்கள் அழியும் ஆபத்து உள்ளது" என்றார்.

எனவே, அகழ்வு பணியை தொல்லியல் துறை விரைவில் தொடங்கவேண்டும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகங்களும், தமிழக அரசும் இது தொடர்பாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in