

தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சபரிமலை யாத்திரை செல்லும்தமிழக பக்தர்களுக்கு உதவுவதற்காக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய வகையில் தகவல் மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இத்தகவல் மையச் சேவையை ஞாயிற்றுக்கிழமை (நாளை) முதல்ஜன.20-ம் தேதி வரை கட்டணமில்லா தொலைபேசி சேவையாக 1800-425-1757 என்ற எண்ணில் அழைத்து பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை, தென்காசி மாவட்டம், செங்கோட்டை - கொல்லம் நெடுஞ்சாலையில் புளியரை கிராமத்திலுள்ள பண்பொழி, திருமலைக்குமார சுவாமி கோயில் நெற்களஞ்சியம் அருகில், தேனி - குமுளி பிரதான சாலையில் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில்வளாகம், பாலக்காடு நெடுஞ்சாலையில் உள்ள நவக்கரை மலையாள தேவி துர்க்கா பகவதி பிராட்டியம்மன் கோயில் மற்றும் பொள்ளாச்சி, பாலக்காடு நெடுஞ்சாலையில் ராமநாதபுரம் கிராமத்திலுள்ள பத்ரகாளியம்மன் கோயில் மண்டபம் ஆகிய இடங்களிலும் தகவல் மையங்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தகவல் மையங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சார வசதி மற்றும் ஐயப்ப பக்தர்களுக்கு வழிகாட்டி விளம்பரப் பலகை ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.