

அரசு நிலங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமித்து புதுச்சேரி துத்திப்பட்டு கிராமத்தில் தனியார் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டியது தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். ஸ்டேடிய உரிமையாளர் நடவடிக்கைகள் தொடர்பாக பிசிசிஐயில் புகார் தெரிவிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி துத்திப்பட்டு கிராமத்தில் தனியார் நிறுவனம் ஒன்று கிரிக்கெட் மைதானத்தை அமைத்துள்ளது. இங்கு ரஞ்சி போட்டிகள் உட்பட பல போட்டிகள் கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
அரசு நிலங்களையும், நீர் நிலைகளையும் ஆக்கிரமித்து இந்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளதாக ஊசுட்டேரி பாதுகாப்பு இயக்கத்தினர் புகார் தெரிவித்தனர். ஏரி நிலத்தில் சாலைகள் அமைத்தும், விதிமீறி அரசு இடத்தில் 10 ஆழ்குழாய் கிணறுகளை தோண்டியுள்ளதுடன், அரசு புறம்போக்கு இடங்களையும் ஆக்கிரமித்துள்ளதாகவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து வட்டாட்சியர் அருண் அய்யாவு நேரில் ஆய்வு செய்து அறிக்கையை கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்தார். இங்கு டி20 கிரிக்கெட் போட்டிகள் அண்மையில் தொடங்கின. தொடக்க நிகழ்வில் முதல்வர் நாராயணசாமி மற்றும் சில உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று வாட்ஸ்அப்பில் தெரிவித்த தகவலில், “புதுச்சேரியின் கிரிக்கெட் அசோசியேஷன் மற்றும் அங்குள்ள தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தின் முழு செயல்பாடு மிக நெறிமுறையற்றது. சட்ட விரோதமானது. இது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. துணைநிலை ஆளுநர் அலுவலகத்துக்கு இது பற்றிய முழு ஆவணங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆட்சியர் அருணுக்கு அவசர நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஸ்டேடிய உரிமையாளர் நடவடிக்கைகள் தொடர்பாக பிசிசிஐயில் புகார் தெரிவிக்கப்படும்." என்று தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து ஆட்சியர் அருணுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது. அதன் விவரம்:
புதுச்சேரி துத்திப்பட்டில் தனியார் (Seichem) கிரிக்கெட் ஸ்டேடியம் அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. அத்துடன் அதில் நீர்நிலை ஆக்கிரமிப்பும் செய்யப்பட்டுள்ளது ஆவணங்களில் தெரிய வந்துள்ளது.
அதனால் அரசு நிலம் மற்றும் நீர் நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். ஸ்டேடிய வளாகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடன் நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.