

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 கிராமங்களில் கருப்பு, சிவப்பு, சாம்பல் நிற கிரானைட் குவாரிகளை அமைப்பதற்கான ஏலம் மற்றும் டெண்டர் விட, விதியை மீறி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமார் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை ஆகிய தாலுக்காக்களுக்கு உட்பட்ட 18 கிராமங்களில் கிரானைட் குவாரிகள் அமைக்க கருப்பு, சிவப்பு, சாம்பல் நிற கிரானைட் குவாரிகளை அமைப்பதற்கான ஏலம் மற்றும் டெண்டர் அறிவிப்பை மாவட்ட ஆட்சியர், அக்டோபர் 9ஆம் தேதி அறிவித்து, அக்டோபர் 17ஆம் தேதி பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது.
கிரானைட் எடுப்பதற்கு மத்திய சுரங்கத் துறையிடம் அனுமதி பெற வேண்டும், அதன் பின்னர்தான் மாநில அரசு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று விதிகள் உள்ள நிலையில், அப்படிப்பட்ட அனுமதியைப் பெறாமல் பிறப்பிக்கப்பட்ட டெண்டர் அறிவிப்பை ரத்து செய்யவேண்டும்.
சுற்றுச்சூழல் தடையில்லாச் சான்றிதழ் பெறப்பட வேண்டும். வழிகாட்டுதல்களுக்கு முரணாக வெளியிடப்பட்டுள்ள இந்த டெண்டர் அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று கோரினார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது .
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனோகர், “மனுதாரர் முன்கூட்டியே வழக்குத் தொடர்ந்துள்ளார். உரிய அனுமதி வாங்க கால நிர்ணயம் உள்ளது” என்று தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், டெண்டர் நடவடிக்கை தொடரலாம் என்றும், ஆனால் அந்த இடங்களை ஒப்படைக்கக் கூடாது என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். வழக்கு விசாரணையை டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
ஏற்கெனவே இதேபோல் தருமபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தாமரைச்செல்வன் தொடர்ந்த வழக்கையும், இந்த வழக்கோடு சேர்த்து விசாரிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.