மெரினாவில் இரவில் அணிவகுத்து சென்ற பைக்குகள்: 600 இருசக்கர வாகனங்களில் சாலை பாதுகாப்பு பேரணி
சென்னை: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வின் ஒரு பகுதியாக, 600 பைக்குகள் மெரினாவில் அணிவகுத்து சென்றன. இந்த மாதம் ஜனவரி 1 முதல் 31-ம் தேதி வரை சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்படுகிறது.
இதையடுத்து இந்த ஜனவரி முழுவதும் பல்வேறு சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு சாலை பாதுகாப்பு சார்ந்த நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
நேப்பியர் பாலத்தில் நிறைவு இதன் ஒரு பகுதியாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் நேற்று முன்தினம் இரவு ‘சூப்பர் பைக் பேரணி’ மெரினா காமராஜர் சாலையில் நடைபெற்றது. இதை சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியில் 600-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் பாதுகாப்பு அம்சங்களுடன் பங்கேற்றனர். இந்த பேரணியானது அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தில் தொடங்கி காமராஜர் சாலை உழைப்பாளர் சிலை, காந்தி சிலை, ஆர்.கே.சாலை, அண்ணா ரோட்டரி, பெரியார் சிலை, கொடி மரச்சாலை வழியாக சென்று நேப்பியர் பாலத்தில் முடிவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் இணை ஆணையர் விஜயகுமார், துணை ஆணையர்கள் மேகலினா ஐடன், குமார், ஜெயகரண் (ஆயுதப்படை) உட்பட பலர் கலந்து கொண்டனர்.
