

தமிழகம் முழுவதும் கடந்த 37 நாட்களில் 54 அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.4 கோடியே 29 லட்சம் லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பண்டிகை கால பரிசுகள்
பண்டிகை காலத்தை முன்னிட்டு அரசு அதிகாரிகள் சிலருக்கு தனியார் நிறுவனங்கள் பரிசுகள் மற்றும்பணம் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அத்தகைய பணம், பரிசுப் பொருட்கள் லஞ்சமாகவே கருதப்படும்.
இதுகுறித்த தகவல்களின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார்கடந்த அக்.1 முதல் நவ.6 வரை54 அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 4 கோடியே 29 லட்சத்து 98 ஆயிரத்து 892 ரூபாய், 519 பவுன் நகைகள், 6.5 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில் அதிகபட்சமாக வேலூர் மண்டல மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரி பன்னீர்செல்வத்தின் வீட்டில் இருந்து ரூ.3 கோடியே 25 லட்சத்து 20 ஆயிரம், 450 பவுன் நகைகள், 6.5 கிலோ வெள்ளி, அவரது அலுவலகத்தில் இருந்து 33 லட்சத்து 73 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட பதிவாளர் துறை டிஐஜி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.1 கோடி,நாமக்கல் நகர திட்டமிடல் இயக்குநர் அலுவலகத்தில் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம், திண்டுக்கல் புவியியல்,சுரங்கத் துறை இணை இயக்குநர் பெருமாளிடம் இருந்து ரூ.4 லட்சத்து 10 ஆயிரம், தேனி மாவட்ட சார் பதிவாளர் பாலமுருகனிடம் இருந்து ரூ.4 லட்சத்து 9 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்துள்ளனர்.