நீலகிரியில் ரூ.520 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள்; முதல்வர் பழனிசாமி வழங்கினார்

மாற்றுத்திறனாளிக்கு பேட்டரி சக்கர நாற்காலி வழங்கிய முதல்வர் பழனிசாமி.
மாற்றுத்திறனாளிக்கு பேட்டரி சக்கர நாற்காலி வழங்கிய முதல்வர் பழனிசாமி.
Updated on
2 min read

நீலகிரியில் ரூ.520 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், புதிய கட்டிடங்கள் திறப்பு மற்றும் புதிய திட்டங்களைத் தமிழக முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் பழனிசாமி இன்று (நவ. 6) நீலகிரி மாவட்டம் உதகை தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

தமிழக அரசினர் விருந்தினர் மாளிகையில் இண்கோசர்வ் சார்பில் வாகனச் சேவையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, முன்னாள் படைவீரர் நலத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை, கூட்டுறவுத்துறை, நகராட்சிகள், வனத்துறை, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சிகள், தாட்கோ, இண்ட்கோசர்வ், தோட்டக்கலைத்துறை, கதர் வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தொழில்நுட்பக் கல்வித்துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ.189.33 கோடியில் முடிவுற்ற 67 திட்டப்பணிகளைத் திறந்து வைத்தார்.

மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பேரூராட்சிகள், நகராட்சிகள், பொதுப்பணித்துறை, தாட்கோ, இண்கோசர்வ், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், வனத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, பொதுப்பணித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ.131.57, கோடியில் 123 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

கோத்தர் பழங்குடியின மக்களின் மண்பாண்டங்கள் செய்முறையை முதல்வர் பழனிசாமி கேட்டறிந்தார்.
கோத்தர் பழங்குடியின மக்களின் மண்பாண்டங்கள் செய்முறையை முதல்வர் பழனிசாமி கேட்டறிந்தார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள், பயனாளிகளுக்கு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பெருங்கடன், இயற்கை வேளாண்மை செய்ய ஊக்கத்தொகை வழங்குதல், முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் 4,188 பயனாளிகளுக்கு ரூ. 199 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், தேயிலைத் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர்களுடன் கலந்துரையாட உள்ளார்.

பழங்குடியின மக்களின் கை வண்ணத்தில் உண்ணி குச்சிகளால் உருவாக்கப்பட்ட யானையை முதல்வர் பழனிசாமி பார்வையிட்டார்.
பழங்குடியின மக்களின் கை வண்ணத்தில் உண்ணி குச்சிகளால் உருவாக்கப்பட்ட யானையை முதல்வர் பழனிசாமி பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அரசு செயலாளர்கள் உட்பட அனைத்துத் துறை உயர் அலுவலர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in