

பூச்சி தாக்குதல் மற்றும் விலை வீழ்ச்சியால் வேதனையடைந்த விவசாயிகள், தேங்கிய தக்காளியை சூளகிரி ஏரியில் கொட்டினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் தக்காளியை, ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட், கிருஷ்ணகிரி, ஓசூர் உழவர் சந்தை, ஓசூர் பத்தலப்பள்ளி சந்தை உள்ளிட்ட இடங்களுக்கு விவசாயிகள் விற்பனைக்கு எடுத்துச் செல்கின்றனர். மேலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்கிறது.
இதுதொடர்பாக சூளகிரியைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகர் கூறும்போது, சூளகிரி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது தக்காளி செடிகளில் பூச்சி தாக்குதல் அதிகளவில் உள்ளது. இதனால் 50 சதவீதம் விளைச்சல் பாதிக்கப்பட்டது. மீதமுள்ள தக்காளிக்கு உரிய விலை கிடைக்கவில்லை. தக்காளி கிலோ ரூ.3 முதல் ரூ.3.50-க்கு மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். அறுவடை கூலி, போக்குவரத்து செலவு, கமிஷன் உள்ளிட்டவைக்கு கையில் இருந்து செலவிட வேண்டி உள்ளது. தக்காளியை அறுவடை செய்யாமல் தோட்டத்திலேயே விடவும் முடியவில்லை. இழப்பினை சந்தித்தாலும், தோட்டத்தை பராமரிக்க வேண்டி பறிக்கப்படும் தக்காளியை ஏரியில் விவசாயிகள் கொட்டுகின்றனர். தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் தக்காளி தோட்டங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு, பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த தேவையான மருந்துகளை வழங்க வேண்டும், என்றார்.