

பாஜகவினர் நடத்தவுள்ள வேல் யாத்திரையை தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நவ. 6-ம் தேதி திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்தப்போவதாக பாஜக அறிவித்துள்ளது. கரோனா காலத்தில் 100 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது இதுபோன்ற அரசியல் ஊர்வலம் நடத்தினால், தமிழக அரசின்மிகக் கண்டிப்பான உத்தரவானசமூக இடைவெளி கடைபிடிக்கப்படாமல் கரோனாவைரஸ் தொற்று தீவிரமடைய வழிவகுக்கும்.
தமிழுக்கும் தமிழ்க் கடவுள் முருகனுக்கும் சம்பந்தமே இல்லாத, தமிழ்க் கடவுள் முருகன் பெயரையே வைத்துக் கொள்ளாத, தமிழை, தமிழகத்தை, தமிழ்ப் பண்பாட்டையே அழிக்க முனைந்துள்ள பாஜகவினர், நவ.6-ம் தேதி நடத்தவிருக்கும் வேல் யாத்திரையில் உள்நோக்கம் இருக்கிறது. எனவே, இந்த வேல் யாத்திரையை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.