

புதுச்சேரியில் இன்று புதிதாக 96 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 600-ஐ நெருங்கியுள்ளது.
இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (நவ. 1) கூறும்போது, "புதுச்சேரியில் 3,182 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-69, காரைக்கால்-11, ஏனாம்-5, மாஹே-11 என மொத்தம் 96 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவிந்த சாலையைச் சேர்ந்த 59 வயது முதியவர், குயவர்பாளையத்தைச் சேர்ந்த 71 வயது மூதாட்டி, லாஸ்பேட்டையைச் சேர்ந்த 64 வயது முதியவர் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 595 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.69 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 35 ஆயிரத்து 109 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் வீடுகளில் 2, 309 பேரும், மருத்துவமனைகளில் 860 பேரும் சிகிச்சையில் உள்ளனர். இதனால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட 3,169 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.
இன்று ஒரே நாளில் 421 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 345 (89.28 சதவீதம்) அதிகரித்துள்ளது.
இதுவரை 3 லட்சத்து 11 ஆயிரத்து 807 பரிசோதனைகள் செய்துள்ளோம். இதில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 523 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.