

விதிகளுக்குப் புறம்பாக தருமபுரி மாவட்டத்தில் கருப்பு, சிவப்பு, சாம்பல் நிற கிரானைட் கற்களை வெட்ட ஆட்சியர் டெண்டர் விட்டுள்ளதாகவும், அதை ரத்து செய்யக் கோரியும் திமுக முன்னாள் எம்.பி. உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் பர்கூர், தேன்கனிக்கோட்டை, போச்சம்பள்ளி தாலுக்காக்களில் 18 இடங்களில் கருப்பு, சிவப்பு, சாம்பல் நிற கிரானைட்டுகளை எடுக்க டெண்டர் கோரி மாவட்ட ஆட்சியர், அக்டோபர் 9-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார்.
விதிகளுக்குப் புறம்பாக பிறப்பிக்கப்பட்ட இந்த டெண்டரை ரத்து செய்யக்கோரி தருமபுரி தொகுதி திமுக முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில், “கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, சுற்றுச்சூழல் சான்றிதழ் பெறப்பட வேண்டும். வழிகாட்டுதல்களுக்கு முரணாக வெளியிடப்பட்டுள்ள இந்த டெண்டர் அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும்” எனக் கோரியுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.