Last Updated : 31 Oct, 2020 05:56 PM

 

Published : 31 Oct 2020 05:56 PM
Last Updated : 31 Oct 2020 05:56 PM

'இந்து தமிழ்' செய்தி எதிரொலி; கோவையிலிருந்து பில்லூர் அணைக்கு மீண்டும் பேருந்து சேவை தொடக்கம்

பிரதிநிதித்துவப் படம்.

கோவை

'இந்து தமிழ்' செய்தி எதிரொலியால் கோவையில் இருந்து பில்லூர் அணைக்கு மீண்டும் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.

கரோனா கால ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, செப்டம்பர் 1-ம் தேதி முதல் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், கோவை மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து பில்லூர் அணைப் பகுதிக்கு இயக்கப்படும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், பில்லூர் அணை, அணைக்குச் செல்லும் வழியில் உள்ள குண்டூர், கெத்தைகாடு, முள்ளி, கோரப்பதி, பரளிக்காடு, பூச்சிமரத்தூர், நெல்லிமரத்தூர், வெள்ளியங்காடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 2,000க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் பேருந்து வசதி இல்லாமல் அவதிக்குள்ளாகி வந்தனர்.

மேலும், அவசரத் தேவைக்காக ஜீப்பில் அதிக வாடகை செலுத்தி பயணித்து வந்தனர். எனவே, ஒரு பேருந்தையாவது இயக்கினால் தங்களுக்கு உதவியாக இருக்கும் எனப் பழங்குடி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பாக 'இந்து தமிழ்' நாளிதழில் கடந்த அக்டோபர் 27-ம் தேதி 'பில்லூர் அணைக்குப் பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி; மருத்துவ தேவைக்காக வாடகை வாகனத்தில் பயணிக்கும் பரிதாபம்' என்ற தலைப்பில் விரிவான செய்தி வெளியானது.

அதில், அரசுப் பேருந்தை நம்பி மக்கள் உள்ளதால், அவர்களின் தேவை கருதி பில்லூருக்கு மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர்.

அதன்படி, பில்லூருக்கு மீண்டும் பேருந்து சேவை கடந்த 28-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. இது தொடர்பாக பில்லூர் பகுதி மக்கள் கூறும்போது, "செய்தி வெளியிட்ட 'இந்து தமிழ்' நாளிதழுக்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x