

பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து வரும் நவ.1 ஆம் தேதி முதல் 151 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக். 29) வெளியிட்ட அறிக்கை:
"தாமிரபரணி ஆற்றில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 7 கால்வாய்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 4 கால்வாய்களின் கீழுள்ள நேரடி மற்றும் மறைமுகப் பாசனப் பரப்புகளுக்கு பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகளிடமிருந்து எனக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன.
விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, தாமிரபரணி ஆற்றில் உள்ள வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய், திருநெல்வேலி கால்வாய் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் மேலக்கால் கால்வாய், மருதூர் கீழக்கால் கால்வாய், தெற்கு பிரதான கால்வாய் மற்றும் வடக்கு பிரதான கால்வாய் ஆகியவற்றின் கீழுள்ள நேரடி மற்றும் மறைமுக பாசனப் பரப்புகளுக்கு பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து, வரும் நவ. 1 முதல் 31.3.2021 வரை 151 நாட்களுக்கு 14 ஆயிரத்து 351.67 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீரைத் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
மேற்கண்ட கால்வாய்ப் பகுதிகளில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 86 ஆயிரத்து 107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.