

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் உள்ள யானை காந்திமதிக்கு 51 வயதாகிறது. கடந்த ஆண்டு இறுதியில் யானையின் எடை 4,450 கிலோவாக இருந்தது. வயதாகிவிட்டதால் எடையை 3,750 கிலோவாக குறைக்க வேண்டும் என்றுகால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால், உணவு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டன.
யானையின் உடல் வெப்பநிலை, உணவு உட்கொள்ளும் திறன், சுவாசிக்கும் திறன், வெளியேற்றும் கழிவுகளின் நிலை, வெளிப்புற தோலின் தன்மை உள்ளிட்டவை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, உரிய ஆலோசனைகளை மருத்துவர்கள் வழங்குகின்றனர். யானைக்கு நேற்று மாதாந்திர மருத்துவ பரிசோதனையை மேற்கொண்ட உதவி மருத்துவர் எஸ்.செல்வமாரியப்பன், “வளர்ப்பு யானைகளுக்கு 50 வயதுக்கு மேலாகி விட்டாலே உடல் எடையை குறைக்க வேண்டும். இதற்காக பல்வேறு வழிமுறைகளை கோயில் நிர்வாகத்துக்கு பரிந்துரைத்தோம்.
பக்தர்கள் சார்பில் வெல்லம், தேங்காய், பழம் உள்ளிட்டவற்றை கொடுக்க தடைவிதிக்கப்பட்டது. கோரைப்புல் உள்ளிட்டவை தினமும் 75 முதல் 150 கிலோ வரை கொடுக்கப்படுகிறது. 4 ரதவீதிகள் வழியே தீர்த்தம் எடுத்து வர யானை அழைத்துச் செல்லப்படுகிறது. அத்துடன் வெளிப்பிரகாரத்தில் 10 முதல் 20 முறை நடைபயிலவும் பாகன்கள் அழைத்துச் செல்கின்றனர்.
இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளால் கடந்த 9 மாதங்களில் மட்டும் காந்திமதியின் எடை 300 கிலோ குறைந்து, தற்போது 4,150 கிலோவாக உள்ளது. யானை மிகவும் சுறுசுறுப்பாக உள்ளது” என்றார்.