

சென்னை உயர் நீதிமன்றத்தில் எழில்நதி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலைப் பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதி பெற வேண்டும். பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள் இ-பாஸ் பெற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலங்கள் இடையே இ-பாஸ் நடைமுறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளதால், தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய முதல் அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுதரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ‘‘கரோனா பரவலை தொடர்ந்து, தமிழக அரசு பல்வேறு தளர்வுகளுடன் வெளியிட்டுள்ள அரசாணைப்படி, மாநிலங்களுக்கு உள்ளே பயணிக்க இ-பாஸ் பெற அவசியம் இல்லை. வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும்பயணிகளும், மலைப் பகுதிகளுக்கு செல்லும் பயணிகளும் கட்டாயம் இணையதளப் பதிவு (இ-ரிஜிஸ்டிரேஷன்) செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.