ஜெகத்ரட்சகன் மீதான நிலமோசடி வழக்கு: நிலம் தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடி வசம் ஒப்படைப்பு

நில அபகரிப்பு வழக்கில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. படம்: எம்.முத்துகணேஷ்
நில அபகரிப்பு வழக்கில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. படம்: எம்.முத்துகணேஷ்
Updated on
1 min read

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான நிலமோசடி வழக்கு விசாரணைக்காக, நிலம் தொடர்பானஆவணங்களை அவரது வழக்கறிஞர்கள் சிபிசிஐடி அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் தொழிற்சாலைக்கு சொந்தமாக இருந்தநிலங்கள், 1982-ம் ஆண்டில் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தின்கீழ் அரசுடைமையாக்கப்பட்டன. அந்த நிலங்களை நீராதாரங்களுக்கு பயன்படுத்தும் வகையில் 1984-ம்ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிலையில், 1996-ம் ஆண்டில் குரோம் தோல் தொழிற்சாலை தலைவராக இருந்த, தற்போதைய திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன், 1.55 ஏக்கர் நிலத்தை, நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தின்விதிகளை மீறி, 41 பயனாளிகளுக்கு பிரித்துக் கொடுத்ததாககூறப்படுகிறது. நீராதாரங்களுக்கு பயன்படும் வகையில் ஒதுக்கப்பட்ட நிலத்தை, தனிநபர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டதாக ஜெகத்ரட்சகன் மீது புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புகார் குறித்து விசாரிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து இந்த புகார் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வழக்கு தொடர்பான ஆதாரங்களை சேர்ப்பதற்காக பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள நிலம் தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி போலீஸார் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். சில ஆவணங்களை மட்டும் நகல் எடுத்துச் சென்றனர்.

பின்னர், நிலம் தொடர்பான ஆவணங்களை சரிபார்ப்பதற்கு அவற்றை சமர்ப்பிக்கக் கோரியும், விசாரணைக்கு ஆஜராகுமாறும் ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது உறவினர்கள் 4 பேருக்குசிபிசிஐடி போலீஸார் நோட்டீஸ் அனுப்பினர். அதைத் தொடர்ந்துஜெகத்ரட்சகனின் வழக்கறிஞர்கள் ஆஜராகி, நிலம் தொடர்பானஆவணங்களை சிபிசிஐடி போலீஸாரிடம் நேற்று ஒப்படைத்தனர். அந்த ஆவணங்களையும், பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து சிபிசிஐடி போலீஸார் ஆய்வு செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in