Last Updated : 20 Oct, 2020 12:39 PM

 

Published : 20 Oct 2020 12:39 PM
Last Updated : 20 Oct 2020 12:39 PM

டிப்ளமோ மாணவர்கள் அரியர் தேர்வுக் கட்டணம் செலுத்த மேலும் கால அவகாசம்: உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு

மதுரை

அனைத்து டிப்ளமோ மாணவர்களின் நலன் கருதி, அவர்களின் அரியர் தேர்வு கட்டணம் செலுத்த மேலும் ஒரு முறை கால அவகாசம் வழங்கவும், தேர்வு எழுத அனுமதிக்கவும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், அரியர் மாணவர்களுக்கு , தேர்வு கட்டணம் செலுத்த ஒரு வாய்ப்பு வழங்கினால், இதற்கு முன் கரோனாவால் தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை காட்டிலும் சிறப்பாக இருக்கும் என நீதிபதி கருத்து தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த தேவதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், " நான் புதுக்கோட்டை தெரசா பாலிடெக்னிக் கல்லூரியில் கட்டிடக் கலை பிரிவில் டிப்ளமோ படித்து வருகிறேன் . நான் பருவத் தேர்வில் சில பாடங்களில் தோல்வி அடைந்ததால், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து இருந்தேன். கரோனா ஊரடங்கால் அதன் முடிவு தாமதமாகியது .

இந்த நிலையில் அரியர் தேர்வு எழுதுவதற்கான, தேர்வுக் கட்டணம் செலுத்த பணம் கட்டுவதற்கு கால அவகாசம் முடிந்துவிட்டது. எனவே, அரியர் தேர்வு எழுத அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன்," மாணவர், பருவத் தேர்வில் தோல்வியடைந்த பாடங்களில் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்துள்ளார்.

மறு மதிப்பீடு முடிவு வருவதற்கு முன்பாகவே அரியர் தேர்வு எழுதுவதற்கான கட்டணம் செலுத்தும் கால அவகாசம் முடிந்து விட்டது. ஆனால் மறு மதிப்பீடு முடிவில் தேர்வில் தோல்வி அடைந்தது உறுதி செய்யப்பட்டவுடன், தேர்வு கட்டணம் செலுத்த நிர்வாகத்தை நாடியுள்ளார். ஆனால் தேர்வு கட்டணம் செலுத்த கால அவகாசம் முடிந்து விட்டதால் அனுமதிக்கவில்லை.

மறு மதிப்பீடு முடிவுக்காக காத்திருந்ததால், குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அரியர் பாடத்திற்கான தேர்வு கட்டணம் செலுத்த இயலவில்லை.
எனவே மாணவரின் நலன் கருதி அரியர் பாடங்களுக்கான, தேர்வுக் கட்டணம் செலுத்த மேலும் ஒரு கடைசி வாய்ப்பு வழங்க வேண்டும்.
மனுதாரருக்கு மட்டும் அல்ல. அனைத்து மாணவர்களின் நலன் கருதி, இதேபோன்ற நிலையில் உள்ள மாணவர்களின், அரியர் தேர்வு கட்டணம் செலுத்த மேலும் ஒரு முறை கால அவகாசம் வழங்க வேண்டும் . அம்மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்

இவ்வாறு, அரியர் மாணவர்களுக்கு, தேர்வு கட்டணம் செலுத்தவும், தேர்வு எழுதவும் ஒரு வாய்ப்பு வழங்கினால், இது இதற்கு முன் கரோனாவால் தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி என்ற அறிவிப்பை காட்டிலும் சிறப்பாக இருக்கும் என்று உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x