வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி; 15 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி; 15 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Updated on
1 min read

வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய வங்கக் கடலின் கிழக்குப்பகுதி முதல் தமிழகம் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் குறிப்பாக திருவள்ளூர், வேலூர்,ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

18-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர், தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் ஆகிய இடங்களில் தலா 13 செமீ, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் 11 செமீ, தஞ்சாவூரில் 9 செமீ, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, திருச்சி மாவட்டம் சமயபுரம், புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருச்சி மாவட்டம் லால்குடி ஆகிய இடங்களில் தலா 8 செமீ மழை பதிவாகியுள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால், நாளை (அக்.19) மத்திய வங்கக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக் கூடும்.

21-ம் தேதி வரை மத்திய கிழக்குவங்கக் கடல், மத்திய மேற்கு வங்கக் கடல், அதை ஒட்டிய ஆந்திரகடலோரப் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதி ஆகியவற்றில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும். எனவே அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in