Published : 16 Oct 2020 10:55 AM
Last Updated : 16 Oct 2020 10:55 AM

லஞ்சம் வாங்கிய நகராட்சி பொறியாளர் கைது: சிபிஐ சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின

ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புதுச்சேரி நகராட்சி பொறியாளர் நள்ளிரவில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சிபிஐ சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.

புதுச்சேரி அடுத்த தேங்காய் திட்டு பகுதியைச் சேர்ந்தவர் இளந்திரையன். இவர் அப்பகுதியில் வீடு கட்டி வருகிறார். இதற்காக மணல், ஜல்லி, கற்களை வீட்டு முன்பு கொட்டியிருந்தார். ‘அனுமதியின்றி வீதியில் பொருட்களை கொட்டி வைப்பது தவறு’ என்று குறிப்பிட்டு, புதுச்சேரி நகராட்சி இளநிலை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி அபராதம் விதிக்க உள்ளதாக குறிப்பிட்டார். இதையடுத்து அவரை இளந்திரையன் அணுக, கிருஷ்ணமூர்த்தி ரூ, 5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். உடனே இளந்திரையன் சென்னையிலுள்ள சிபிஐ கிளையை அணுகினார்.

இதன் பேரில் 10 சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் புதுச்சேரி வந்தனர். இளந்திரையனை சந்தித்து பேசிய அதிகாரிகள், ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்தனர். சிபிஐ கூடுதல் எஸ்பி பசுவய்யா தலைமையில் நேற்றுமுன்தினம் மாலை நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.

‘லஞ்சப் பணத்தை தர எங்கு வந்து தர வேண்டும்?’ என்று பொறியாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் தொலை பேசியில் இளந்திரையன் கேட்டுள்ளார். கம்பன் கலையரங்கத்தில் உள்ள நகராட்சி அலுவலகம் பார்க்கிங் பகுதிக்கு வருமாறு கூற, அங்கு சென்ற இளந்திரையன், ரசாயனம் தடவிய பணத்தை கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்தார். அதை அவர் பெற்று கொண்ட போது, மறைந்து இருந்த சிபிஐ அதிகாரிகள் கைது கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.

தொடர்ந்து புதுச்சேரி நகராட்சி அலுவலக நுழைவாயில்களை பூட்டி இரவு முழுவதும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனைக்கு பிறகு பொறியாளர் வீட்டுக்கு சென்று அங்கும் சோதனை நடத்தினர். அனைத்து விவரங்கள் ஆவணங்கள் ஆகியவற்றையும் எடுத்துள்ளதுடன், லஞ்ச விவகாரத்தில் இதர அதிகாரிக ளுக்கு தொடர்பு உள்ளதா என்பதை யும் விசாரிக்க தொடங்கியுள்ளனர்.

சிபிஐ சோதனை ஏன்?

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே , ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்கள் உள்ளன . புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத்துறை இந்த 4 பிராந்தியங்களிலும் கடந்த 5 ஆண்டுகளாக அரசு துறைகளில் வெறும் 30க்கும் குறைவான லஞ்ச, ஊழல் தொடர்பான வழக்குகளை பதிவு செய்துள்ளது.

இச்சூழலில் கடந்தாண்டு நவம்பரில் புதுச்சேரிக்கான சிபிஐ கிளை அமைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சிபிஐ வட்டாரங்களில் விசாரித்தபோது, "புதுச்சேரிக்கான சிபிஐ கிளை சென்னையில் உள்ளது. சென்னை தலைமை அலுவலகத்தின் கீழ் இது செயல்பட்டு வருகிறது. புதுச் சேரியைச் சேர்ந்த பொதுமக்கள் எளிதாக இந்த அலுவலகத்தை அணுகி ஊழலுக்கு எதிரான புகார்களை தர முடியும்." என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x