

நாகப்பட்டினம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ஓம் பிரகாஷ் மீனா இன்று பொறுப்பெற்றுக் கொண்டார்.
நாகப்பட்டினம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த செ.செல்வநாகரத்தினம் சென்னை காவல் தலைமையகத்திலிருந்து வந்த பணி நியமன உத்தரவின்படி நாகை மாவட்டத்தில் இருந்து மாாற்றப்பட்டு சென்னையில் உள்ள நிர்வாக உதவி காவல்துறை தலைவராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.
அதைத்தொடர்ந்து சென்னை நிர்வாக உதவி காவல்துறை தலைவர் பதவியிலிருந்த காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். அதனையடுத்து இன்று காலை நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வருகை தந்த அவருக்,கு நாகப்பட்டினம் மாவட்டக் காவல்துறை சார்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் யு.முருகேஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார்.
இதனைத் தொடர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு அவர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "பொதுமக்கள் மற்றும் சமூகத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய குற்றங்கள் கண்டறியப்பட்டு அவற்றைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காவல்துறை உயரதிகாரிகளின் வழிகாட்டுதலுடன் நாகை மாவட்டக் காவல்துறை, மக்கள் நலனுக்காகத் தொடர்ந்து சீரிய முறையில் பணியாற்றும். குற்ற வழக்குகள் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படும். காவல்துறை மற்றும் பொதுமக்களிடையே சுமுகமான முறையில் நல்லுறவு ஏற்படுத்தப்படும்" என ஓம் பிரகாஷ் மீனா தெரிவித்தார்.
மேலும் நாகப்பட்டினம் மாவட்ட பொது மக்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.