

சென்னை மாநகரப் பேருந்துகளில் அலுவலக நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பயணிகள் நின்றுகொண்டு பயணம் செய்வதால், கரோனா தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகர பேருந்து நடத்துநர்கள் சிலர் கூறும்போது, ‘‘முழு அளவில் மாநகர பேருந்துகள் இன்னும் இயக்கப்படவில்லை. மேலும், மின்சார ரயில்களின் சேவையும் இல்லை. பெரும்பாலான அலுவலகங்கள் திறக்கப்பட்டு விட்டன. இதனால் காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது’’ என்றனர்.
பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘கரோனா ஊரடங்கால் 5 மாதங்களுக்கும் மேலாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். கரோனா அச்சம் இருந்தாலும், வேறு வழியில்லாமல் தற்போது பேருந்துகளில் வேலைக்குச் சென்று வருகின்றனர். பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு மாநகர பேருந்துகளை கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.