அசாம் பெண்ணுக்கு திருப்பூரில் பாலியல் வன்கொடுமை: உயர் நீதிமன்றம் வேதனை; நடவடிக்கை எடுக்க ஐஜிக்கு உத்தரவு

அசாம் பெண்ணுக்கு திருப்பூரில் பாலியல் வன்கொடுமை: உயர் நீதிமன்றம் வேதனை; நடவடிக்கை எடுக்க ஐஜிக்கு உத்தரவு
Updated on
1 min read

புலம்பெயர் தொழிலாளர்கள் நலன் குறித்த வழக்கு விசாரணையில் அசாம் மாநிலப் பெண் திருப்பூரில் 4 நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது குறித்து வழக்கறிஞர் முறையீட்டை ஏற்று வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மேற்கு மண்டல ஐஜிக்கு உத்தரவிட்டது.

கரோனா ஊரடங்கின்போது, மகாராஷ்டிராவில் உள்ள தமிழர்களை மீட்கக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் தொடர்பான விவகாரங்களில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து வழக்கை அடுத்த வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அப்போது மனுதாரர் சூரியபிரகாசம் ஆஜராகி, திருப்பூர் மாவட்டத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 4 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக தனியார் தொலைக்காட்சியில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டி முறையீடு செய்தார்.

அதற்கு நீதிபதிகள், தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய நேரக் கட்டுப்பாடு இல்லை என்றும், உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டினர். மேலும், புனித பூமி என்று கருதப்படும் இந்திய நாட்டில், 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடப்பதால், பாலியல் வன்கொடுமைக்கான நிலமாக இந்தியா மாறியுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

இது துரதிஷ்டவசமானது என்றும், குறிப்பாக இந்தியாவில் புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பில்லை என்றும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். பின்னர், திருப்பூர் சம்பவம் குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி. விசாரணையை விரைவுபடுத்தி குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in