நீட் தேர்வு; மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்றும்படி வற்புறுத்தக் கூடாது: உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
1 min read

நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்றும்படி வற்புறுத்தக் கூடாது என தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 2017-ம் ஆண்டு முதல் மருத்துவப் படிப்புக்களுக்கான நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகள், ஆபரணங்கள் அணியக்கூடாது, 'பர்ஸ்' வைத்திருக்கக் கூடாது, கைக்கடிகாரம் அணியக் கூடாது என்பன உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்தக் கட்டுபாடுகள் காரணமாக, ஆண்டுதோறும் மாணவ, மாணவிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அரவிந்த் ராஜ், உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், நீட் தேர்வில் கலந்துகொள்ளும் திருமணமான விண்ணப்பதாரர்கள் புனிதமாகக் கருதும் தாலி, மெட்டி மற்றும் காதணி, மூக்குத்தி போன்றவற்றை அகற்றும்படி நிர்பந்திக்கப்படுவதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்வறையில் கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், ஆபரணங்களை அகற்ற வேண்டும் என்ற நிபந்தனை சட்டவிரோதமானது என்பதால் இந்த நிபந்தனைகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அறிவிக்கவேண்டும் எனவும், ஆபரணங்களை அகற்றும்படி, மாணவிகளை நிர்பந்திக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in