

புதுச்சேரியில் இன்று புதிதாக 387 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (செப். 29) கூறும்போது, "புதுச்சேரியில் 5,031 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி-312, காரைக்கால்-48, ஏனாம்-17, மாஹே-10 என மொத்தம் 387 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 517 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.91 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 27 ஆயிரத்து 66 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் புதுச்சேரியில் 2,578 பேர், காரைக்காலில் 474 பேர், ஏனாமில் 84 பேர், மாஹேவில் 35 பேர் என 3,171 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 1,433 பேர், காரைக்காலில் 161 பேர், ஏனாமில் 113 பேர், மாஹேவில் 55 பேர் என மொத்தம் 1,762 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,933 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று புதுச்சேரியில் 359 பேர், காரைக்காலில் 54 பேர், ஏனாமில் 28 பேர், மாஹேவில் 19 பேர் என மொத்தம் 460 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்து 616 (79.86 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 1 லட்சத்து 79 ஆயிரத்து 780 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 1 லட்சத்து 49 ஆயிரத்து 327 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.