கட்சியில் தவறு செய்பவர்கள் விரட்டி அடிக்கப்படுவார்கள்: அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை

கட்சியில் தவறு செய்பவர்கள் விரட்டி அடிக்கப்படுவார்கள்: அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை
Updated on
1 min read

‘‘கட்சியில் தவறு செய்கிறவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள், ’’ என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரை காமராஜர் சாலையில் தனியார் கல்யாண மண்டபத்தில் சவுராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் பங்கு முதலீடு செய்தவர்களுக்கு அமைச்சர் செல்லூர் கே. ராஜூ சான்றிதழ் வழங்கினார்.

அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இயக்கத்திற்காக யார் விசுவாசமாக இருக்கிறார்களோ அவர்களை உயர்ந்த இடத்தில் வைப்போம். கட்சியில் யார், யார் தவறு செய்கிறார்களோ அவர்களை பக்கத்தில் வைக்காமல் விரட்டி விட்டு விடுவோம்.

திமுகவின் ரவுடியிஸத்தை மீண்டும் பார்க்க மக்கள் அவர்களை ஆடசிக்கு வர அனுமதிக்கக் கூடாது. மிரட்டும் கட்சி, ஆட்சி யாருடையது என்பது உங்களுக்குத் தெரியும்.தமிழக மக்களுக்காக எதை செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறோம்.

அதிமுக ஆட்சியில் மதுரையின் வளர்ச்சி அபரிதமாக உள்ளது. மத்திய அரசும் மாநில அரசும் இணக்கமாக உள்ளது.

மக்களுக்கான திட்டங்களையெல்லாம் நாங்கள் ஆதரிக்கிறோம். மக்களுக்கு விரும்பாத திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

தமிழகத்தில் மிகச் சிறந்த நிர்வாகம் செய்வதாக பிரதமர் மோடியே முதலமைச்சர் கே.பழனிசாமியை பராட்டியுள்ளார்.

அதிமுக என்ற கட்சி, எம்ஜிஆர் ஜெயலலிதா வளர்த்த கட்சி. ஒருபோதும் மக்களை மறக்க மாட்டோம். எம்ஜிஆர் தான் எனது குரு. எனக்கு சிறுவயதிலேயே தந்தை இறந்து விட்டார். தாயின் அரவணைப்பில் தான் வளர்ந்தேன்.

இக்காலத் திரைப்படங்களைப் பார்த்தால் பிள்ளைகள் கெட்டுப்போய் விடுவார்கள். அன்றைக்கு திரைப்படங்கள் பார்த்து தான் நல்ல குழந்தைகள் உருவானார்கள். தடம் மாறாமல் நேர்வழியில் செல்ல அன்றைய திரைப்படங்கள் தான் உதவின" என்று அமைச்சர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in