

புதுச்சேரியில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று 668 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (செப். 24) கூறும்போது, "புதுச்சேரியில் அதிகபட்சமாக 5,945 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது புதுச்சேரியில் 533, காரைக்காலில் 99, ஏனாமில் 27, மாஹேவில் 9 என மொத்தம் 668 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் 4 பேர், காரைக்காலில் 2 பேர் என 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 487 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.96 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 24 ஆயிரத்து 895 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் புதுச்சேரியில் 2,669 பேர், காரைக்காலில் 486 பேர், ஏனாமில் 105 பேர், மாஹேவில் 20 பேர் என 3,280 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 1,453 பேர், காரைக்காலில் 169 பேர், ஏனாமில் 152 பேர், மாஹேவில் 43 பேர் என மொத்தம் 1,817 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 5,097 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று புதுச்சேரியில் 347 பேர், காரைக்காலில் 31 பேர், ஏனாமில் 37 பேர், மாஹேவில் 3 பேர் என மொத்தம் 418 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 311 (77.57 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 1 லட்சத்து 55 ஆயிரத்து 25 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 215 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.