2017-ம் ஆண்டு நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக்கோரும் ஸ்டாலின் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் நவ.10-ல் இறுதி விசாரணை

2017-ம் ஆண்டு நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக்கோரும் ஸ்டாலின் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் நவ.10-ல் இறுதி விசாரணை
Updated on
1 min read

கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக் கோரி திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், நவம்பர் 10-ம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்ததை அடுத்து, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்றார். பின்னர் 2017-ம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார். பின்னர், சசிகலா பதவி ஏற்பதாக இருந்தது. ஆனால், அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று சிறை சென்றார்.

அவர் சிறைக்குச் செல்லும் முன் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார். ஓபிஎஸ் கட்சியிலிருந்து வெளியேறினார். அதன் பின்னர், 2017 பிப்ரவரி 18-ம் தேதி பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்பட்டது. அப்போது நடந்த வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்து, ரகசிய வாக்கெடுப்பு மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில், ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரிக்கை விடுத்தும் அதை ஏற்காத சபாநாயகர், திமுக உறுப்பினர்களை வெளியேற்றி விட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது சட்டவிரோதமானது என்று கூறியிருந்தார்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, இருதரப்பிலும் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்குகளின் இறுதி விசாரணையை நவம்பர் 10-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in