Published : 22 Sep 2020 10:41 AM
Last Updated : 22 Sep 2020 10:41 AM

திண்டுக்கல்லில் ஆதரவற்ற நிலையில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த இளைஞர்கள்

திண்டுக்கல் புறவழிச் சாலை பகுதியில் ஆதரவற்ற நிலையில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்த்துள்ளனர் திண்டுக்கல்லைச் சேர்ந்த இளைஞர்கள்.

பசியில்லா வடமதுரை என்ற அமைப்பின் சார்பில் திண்டுக்கல்லில் ஆதரவற்ற 50 பேருக்கு தினமும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் உணவு வழங்கச் சென்றவர்கள் திண்டுக்கல் புறவழிச் சாலையில் ஒரு இளைஞர் அழுக்கு உடைகளுடன் நடந்து சென்றதைப் பார்த்தனர். அவரிடம் விசாரித்தபோது, தனது பெயர் ஜோதிபாசு(30) என்றும், சொந்த ஊர் மதுரை என்றும் கூறியுள்ளார். மேலும், தனது நண்பரைப் பார்க்க திருச்சிக்கு நடந்து செல்வதாகக் கூறியுள்ளார். அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பது தெரியவந்தது.

அவரை குளிக்க வைத்து உணவு வழங்கி, புது ஆடைகள் அணிவித்தனர். ஜோதிபாசுவை புகைப்படம், வீடியோ எடுத்து முகநூலில் பதிவிட்டனர். இவரை பற்றிய விவரம் தெரிந்தோர் தங்களை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கோண்டனர். பதிவிட்ட சில மணிநேரங்களிலேயே பதில் கிடைத்தது. ஜோதிபாசு, மதுரை அருகேயுள்ள அச்சம்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் என அவரது நண்பர்கள் மொபைல்போனில் தொடர்புகொண்டு தெரிவித்தனர்.

இதையடுத்து பசியில்லா வடமதுரை அமைப்பைச் சேர்ந்த பிரேம், திண்டுக்கல்லைச் சேர்ந்த தன்னார்வலர்கள் முஜிபுர் ரகுமான், பிலான் உசேன் ஆகியோர், ஜோதிபாசுவை காரில் அச்சம்பத்துக்கு அழைத்துச் சென்று அவரது நண்பர்களிடமும், உறவினர்களிடமும் ஒப்படைத்தனர்.

ஜோதிபாசுவின் தாயார் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்ததும், பாட்டி உடல்நலக் குறைவுடன் இருந்ததும் தெரியவந்தது. ஜோதிபாசுவை நண்பர்கள் தங்களுடன் வேலைக்கு அழைத்துச் செல்வது வழக்கம். கடந்த 5 மாதங்களாக கரோனா ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்த ஜோதிபாசு, கால்போன போக்கில் நடந்து பல இடங்களுக்குச் சென்றுவிட்டு திண்டுக்கல்லுக்கு வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தன்னார்வலர் முஜிபுர் ரகுமான் கூறியதாவது: இதுபோல் ஆதரவின்றியும், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் இருந்த பலரை முகநூலில் பதிவிட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளோம்.

இந்தப் பணியை பசியில்லாத வடமதுரை அமைப்பு உள்ளிட்டோருடன் சேர்ந்து இளைஞர்கள் பலர் செய்து வருகின்றனர். அனைவரின் ஆதரவுடன் இதுபோன்ற சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x