

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், திருச்சி காந்தி மார்க்கெட் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டுள்ளது. பொன்மலை ஜி கார்னர் பகுதியில் தற்காலிக மார்க்கெட் செயல்படுகிறது. காந்தி மார்க்கெட்டை திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ஏற்கெனவே பல கோடி ரூபாய் செலவில் கள்ளிக்குடியில் புதிய மார்க்கெட் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. எனவே காந்தி மார்க்கெட்டை திறக்க தடை விதித்து, கள்ளிக்குடியில் கட்டப்பட்டுள்ள மார்க்கெட்டை செயல்பாட்டுக்கு கொண்டுவரவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது காந்தி மார்க்கெட்டை திறக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் இன்று விசாரணைக்க வந்தது. மனுதாரர் தரப்பில் காந்தி மார்க்கெட்டை செப். 28-ல் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து காந்தி மார்க்கெட்டை திறக்க ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து, விசாரணையை அக். 13-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.