போக்குவரத்துக் கழகத்தை படிப்படியாக தனியார்மயமாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது: விஜயகாந்த்

விஜயகாந்த்: கோப்புப்படம்
விஜயகாந்த்: கோப்புப்படம்
Updated on
1 min read

போக்குவரத்துக் கழகத்தை படிப்படியாக தனியார்மயமாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது என, தேமுதிக தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, விஜயகாந்த் இன்று (செப். 15) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு, இரண்டு ஆண்டுகள் கடந்தும் அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை பணம், மற்றும் எந்த பணப்பலன்களும் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் தன் குழந்தைகளை மேல்படிப்புப் படிக்க வைப்பதற்கும், திருமணம் நடத்துவதற்கும் வழியில்லாமல் தவித்து வருகின்றனர்.

ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய பணத்தை உடனடியாகக் கொடுக்க வேண்டும். நீதிமன்றம் கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தும் கொடுக்காதது ஏன்?.

மேலும், அரசு போக்குவரத்துக் கழகம் தனியார் பேருந்துகளை வாடகைக்கு அமர்த்தி அரசு பேருந்து வழித்தடத்தில் போக்குவரத்தை இயக்க (ஜி.ஓ. எண்: MS261/29/7/2020) அரசாணை போடப்பட்டுள்ளது. இதனால் அரசு போக்குவரத்துக் கழகம் படிப்படியாக தனியார்மயமாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.

இதை உடனடியாக தவிர்ப்பதோடு இந்த அரசாணையை ரத்து செய்து ஏழை, எளிய மக்களும், குக்கிராமத்தில் வசிக்கும் மக்களும், பள்ளிக் குழந்தைகளும் பயன்படும் வகையில் தற்போது நஷ்டம் என்று தெரிந்தும் பொதுமக்கள் சேவையில் அரசு போக்குவரத்துக் கழகம் ஈடுபட்டு வருகிறது. தனியார்மயம் ஆக்கப்பட்டால் லாபம் உள்ள வழித்தடங்கள் மட்டும் பேருந்துகளை இயக்குவார்கள். இதனால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்திற்காகவும், தங்கள் உரிமைக்காகவும் அவர்கள் ஓய்வு பெறும்போது அவர்கள் பணத்தைத் திரும்பப் பெறவும் பல கட்ட போராட்டங்கள் நடத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்குகிறார்கள்.

மற்ற துறைகள் போன்று பொதுச் சேவையில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துக் கழக ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in