

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 முதல்19 வயது வரை உள்ள 3,73,799குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார்.
தேசிய குடற்புழு நீக்க நாள் செப். 14 முதல் 26-ம் தேதிவரை செயல்படுத்தப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் ஆட்சியர் பொன்னையா பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.
மேலும் ராகவேந்திரா நகரில் உள்ள அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கும் ராகவேந்திரா நகரில் உள்ள வீடுகளுக்கும் நேரில் சென்று குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரை உள்ள 3,73,799 குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு அல்பென்டசோல் என்ற சுவைத்து சாப்பிடும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மூலம் அனைத்துகுழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன. குடற்புழுக்களை நீக்கி குழந்தைகள் ஆரோக்கியத்தை பேணி காக்க அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் ஆட்சியர் வலியுறுத்தினர்.
இந்த நிகழ்வின்போது சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மரு.பழனி, வட்டார மருத்துவ அலுவலர் அருள்மொழி, நகர் நல அலுவலர் (பொ) பிரசன்னா, மருத்துவ அலுவலர் நாசிக், காஞ்சிபுரம் வட்டாட்சியர் பவானி உட்பட பலர் பங்கேற்றனர். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மூலம் அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்பட உள்ளன.