சட்டப்பேரவை கூட்டத்தொடர்; கரோனா பரிசோதனை: ஸ்டாலின்,ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு தொற்று இல்லை

சட்டப்பேரவை கூட்டத்தொடர்; கரோனா பரிசோதனை: ஸ்டாலின்,ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு தொற்று இல்லை
Updated on
1 min read

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்படும் எனவும் சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதி என சபாநாயகர் அறிவித்திருந்த நிலையில் கரோனா பரிசோதனையில் ஸ்டாலின், ஓபிஎஸ், இபிஎஸ்சுக்கு கரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிதித்தேவை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக 6 மாதத்துக்கு ஒரு முறை கூட்டப்படவேண்டும். இதனடிப்படையில் கரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தற்போதுள்ள சட்டப்பேரவையில் கூட்டத்தை நடத்த இயலாது என முடிவெடுக்கப்பட்ட நிலையில் கலைவாணர் அரங்கத்தில் நடத்தலாமா என சபாநாயகர் தனபால் ஆய்வு நடத்தினார். அதன் அடிப்படையில் கலைவாணர் அரங்கில் நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. இதன்படி அலுவல் ஆய்வுக்குழு கூடி 3 நாட்கள் சட்டசபையை நடத்தலாம் என முடிவெடுத்தது.

இந்நிலையில் சட்டப்பேரவைக்கு வரும் சட்டமன்ற உறுப்பினர்கள், ஊடகங்கள், ஊழியர்கள், அலுவலர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்து சான்றிதழுடன் வந்தால்தான் அனுமதி என சட்டப்பேரவை தலைவர் அறிவித்தார்.

அதன்படி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் 3 நாட்களுக்கு முன்னரே பரிசோதனை நடத்தப்படவேண்டும் என முடிவெடுக்கப்பட்டு நேற்றுமுதல் உறுப்பினர்களின் இல்லங்களுக்கேச் சென்று பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

முக்கிய தலைவர்களான முதல்வர் எடப்பாடி, துணைமுதல்வர் ஓபிஎஸ், எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலருக்கும் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் அவர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்கிற நல்ல தகவல் கிடைத்துள்ளது. அதேப்போன்று சபாநாயகர் தனபாலுக்கும் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

இதேப்போல் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் முதற்கட்டத் தகவலாக 2 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுதவிர ஊடகங்கள், அரசுத்துறை அலுவலர்கள், ஊழியர்களுக்கும் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டதில் இதுவரை முடிவுகள் வெளியாகவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in