ரூ.3 கோடியே 47 லட்சம் சம்பளத்தை நேரடியாக தனது அறக்கட்டளைக்குச் செலுத்தக் கோரிய வழக்கு: ஏ.ஆர்.ரகுமான் விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஏ.ஆர்.ரகுமான்: கோப்புப்படம்
ஏ.ஆர்.ரகுமான்: கோப்புப்படம்
Updated on
1 min read

வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இங்கிலாந்தைச் சேர்ந்த லிப்ரா மொபைல்ஸ் நிறுவனத்திற்கு ரிங் டோன் இசையமைத்துக் கொடுப்பது தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டார். இதற்கு ஊதியமாக வழங்கும் 3 கோடியே 47 லட்சம் ரூபாயை தனது ஏ.ஆர்.ஆர். அறக்கட்டளைக்கு நேரடியாக செலுத்தும்படி ரகுமான் கூறியுள்ளார்.

இதன் மூலம் வருமான வரி செலுத்துவதை தவிர்க்க ரகுமான் முயற்சித்ததாக கூறி வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. இந்த விசாரணையில், ரகுமான் தரப்பு விளக்கத்தை ஏற்று, விசாரணையை கைவிட்டு முதன்மை ஆணையர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை வருமான வரித்துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயமும் உறுதி செய்தது. கடந்த 2019 செப்டம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று (செப். 11) விசாரித்த நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in