Last Updated : 11 Sep, 2020 06:56 AM

 

Published : 11 Sep 2020 06:56 AM
Last Updated : 11 Sep 2020 06:56 AM

‘திமுகவில் பட்டியல் வகுப்பினருக்கு வெறும் சோடா பாட்டில் பவர்தான்’- தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி விமர்சனம்

‘இந்து தமிழ் திசை’ 8.9.2020 நாளிதழில் ‘திமுகவில் பட்டியல் வகுப்பினருக்கு முக்கிய பதவி கிடையாதா?’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரை தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆ.ராசா உள்ளிட்டோர் இதற்கு மாற்று கருத்துகளைத் தெரிவித்திருந்தார்கள்.

திமுக ஒருபோதும் அதிகாரத்தீண்டாமையைக் கடைபிடித்தது இல்லை என்று அந்த கட்டுரையை மறுத்து திமுக ஆதரவாளர்கள், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் கருத்து வெளியிட்டனர். அதேசமயம், திமுகவின் சட்ட விதிமுறைகள் திருத்தப்பட்டு உடனடியாக ஆ.ராசாவும் ஒரு துணைப் பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டார்.

இந்நிலையில், திமுகவின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளரும், பாஜகவின் தற்போதைய மாநில துணைத் தலைவருமான வி.பி.துரைசாமி ‘இந்து தமிழ் திசை' நாளிதழுக்கு பேட்டி அளித்தார். திமுக வரலாற்றில் பட்டியல் வகுப்பினருக்கு தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகள் ஒருமுறைகூட வழங்கப்பட்டதில்லை என்பதை முன்வைத்து அவர் அளித்த பேட்டியிலிருந்து...

ஆ.ராசாவை துணைப் பொதுச் செயலாளர் ஆக்கியுள்ளதே திமுக?

பட்டியல் வகுப்பினரிடம் வேலையை வாங்கிக் கொண்டு, அதற்கு உரிய கூலியை திமுக கொடுப்பதில்லை என்பதே இப்போதும் என் ஆதங்கம். துணைப் பொதுச் செயலாளர் என்பது பற்றிஅடுத்து வருகிறேன். பொருளாளர் பதவிக்கு ஆ.ராசாவை வேட்புமனு போடக்கூட‌ விடவில்லைஎன்பதுதான் என்னிடம் உள்ள தகவல். இப்போதும்கூட 65-க்கும் மேற்பட்ட அதிகாரம் மிக்க மாவட்டசெயலாளர் பதவிகளில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சி.வெ.கணேசனை தவிர வேறுயாரேனும் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர் இருக்கிறார்களா, சொல்லச் சொல்லுங்கள்!

துணைச்செயலாளர் மட்டும்தான்

திமுகவில் பட்டியல் வகுப்பினருக்கு மாநில துணைச் செயலாளர், மாநகராட்சி துணைச் செயலாளர், மாவட்ட துணைச் செயலாளர், நகராட்சி துணைச் செயலாளர், ஒன்றிய துணைச் செயலாளர், பேரூராட்சி துணைச் செயலாளர், ஊர்க் கிளை துணைச் செயலாளர் என துணைச் செயலாளர் பதவியை மட்டுமே தருகிறார்கள். பட்டியல் வகுப்பினர் திமுகவின் வளர்ச்சிக்கு வெறும் துணையாக மட்டும்தான் வைத்துக் கொள்ளப்படுவார்களா?

கட்சி தோன்றி வளர்ந்த இந்த 70 ஆண்டுகளாக தொடர்ந்து உழைத்த பட்டியல் வகுப்புத் தலைவர்களுக்கு ‘துணை’ தவிர வேறுஎன்ன முக்கியத்துவம் கொடுத்துவிட்டார்கள்?

மறைந்த தலைவர் கருணாநிதி, திமுகவின் சட்ட விதிகளை திருத்தி கிளை கழகம் தொடங்கி தலைமை கழகம் வரை பட்டியல் வகுப்பினருக்கு பதவி கொடுத்ததாக சொல்கிறார்களே?

அவர் திமுகவின் சட்ட விதிகளை திருத்தியது உண்மைதான். ஆனால் பட்டியல் வகுப்பினருக்கு என்ன பதவி கொடுத்தார்? ஊர்க் கிளை கழகத்தில் தொடங்கி தலைமை கழகம் வரை கூடுதல் செயலாளர் பதவியைத் தானே கொடுத்தார். அதிகாரம் மிகுந்த‌ மாவட்டச் செயலாளர் பதவியோ, நகரச் செயலாளர் பதவியோ, பேரூராட்சி செயலாளர் பதவியோ கொடுத்தாரா? கூடுதல் செயலாளர் என்ற பதவியும் தேய்ந்து இப்போது துணை செயலாளர் ஆகிவிட்டது. அதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

அதிகாரம், சுதந்திரம் கிடையாது

துணைப் பொதுச் செயலாளர் பதவியை எனக்கும் வழங்கி இருந்தார்கள். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அந்த துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு ’சோடா பாட்டில் பவர்’ தான் இருக்கிறது. அதாவது சோடா பாட்டிலை திறக்கும் போது ஒரு சத்தம் வருமே, அந்த சத்தம் அளவுக்குதான் அதிகாரம் இருக்கிறது. வேறெந்த முக்கியத்துவமோ, தனிப்பட்ட அதிகாரமோ, சுதந்திரமோ கிடையாது. திமுகவில் பட்டியல் வகுப்பினருக்கு இதுபோன்ற ‘சோடா பாட்டில் பவர்’ பதவிகள்தான் கிடைக்கும்.

பட்டியல் வகுப்பினருக்கு எல்லா உரிமைகளையும் பரிபூரணமாக வழங்கிய ஒரே கட்சி திமுகதான் என ஆ.ராசாவே கூறுகிறாரே?

ஆ.ராசாவுக்கு அமைச்சர் பதவி வழங்கி விட்டதாலே ஒட்டுமொத்த பட்டியல் வகுப்பினருக்கும் பரிபூரணமான உரிமையும் அதிகாரமும் வழங்கிவிட்டதாக ஆகிவிடுமா? நான் வேண்டுமானால் பகிரங்கமாக சவால் விடுகிறேன். பட்டியல் வகுப்பினருக்கு கட்சியிலும், ஆட்சியிலும் அந்த வகுப்பினரின் பங்களிப்புக்கு ஏற்ற பிரதிநிதித்துவம் வழங்கியதாக திமுக வெளிப்படையாக வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா?

சத்தியவாணி முத்து, பரிதி இளம் வழுதி, வி.பி.துரைசாமி ஆகியோரை திமுக நிராகரிக்கவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்கு கட்சியை விட்டு விலகினார்கள் என ஆ.ராசா சொல்கிறாரே?

திமுகவில் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் சத்தியவாணி முத்து. அவருக்கு இணையாக பிற சமூக தலைவர்களை கூட ஒப்பிட முடியாது. பெண்ணாக இருந்தாலும் ஆண் தலைவர்களை காட்டிலும் பெரும் செல்வாக்கோடு இருந்தார். சிறையில் பிள்ளையை பெற்ற தியாக தலைவர். அவருக்கு இணையாக தியாகம் செய்தவர்கள் யாரேனும் திமுகவில் இருக்கிறார்களா?

அர்ப்பணிப்பின் காரணமாகவே அன்னை சத்தியவாணி முத்து, அண்ணாவுக்கு பிடித்தமான ஆளுமையாக இருந்தார். எம்ஜிஆருக்கும் பிடித்தமான தலைவராக இருந்ததாலே அவரை மத்திய அமைச்சராக்கி மரியாதை அளித்தார்.

ஆனால், அண்ணாவுக்குப் பின் கருணாநிதி தலைவரான பின் திமுகவில் சத்தியவாணி முத்து புறக்கணிக்கப்பட்டார். கட்சியில் பட்டியல் இன மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம், மரியாதை அளிக்கப்படவில்லை என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அமைச்சர்பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இருந்து வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு, பின்னர் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். சத்தியவாணி முத்துவை திமுக எப்படியெல்லாம் பழி வாங்கியது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் சத்தியவாணி முத்து எழுதிய ‘எனது போராட்டங்கள்’ என்ற நூலைப் படிக்க வேண்டும்.

உதாசீனப்படுத்தப்பட்டோம்

அதேபோல் கட்சிக்காக எதையும் தாங்கத் தயாராக இருந்த பரிதி இளம்வழுதிக்கு நேர்ந்த நிலைமையையும் சொல்ல முடியும். எங்களைப் போன்றவர்களை இப்படி எல்லாம் உதாசீனப்படுத்தாமல் இருந்தால், உயிரைக் கொடுத்து வளர்த்த கட்சியை விட்டு நாங்கள் ஏன் விலகப் போகிறோம்?

நீங்கள் திமுகவில் இருந்து விலகியபோது அங்கு சாதி பாகுபாடு காட்டப்பட்டதாக கூறினீர்கள். இப்போது பாஜகவில் எப்படி நடத்துகிறார்கள்?

சாதிரீதியாக பாகுபாடு காட்டியதாலேயே நான் திமுகவில் இருந்து விலகினேன். திமுகவில் சாதிக்கு ஒரு நீதி இருக்கிறது. கே.பி.ராமலிங்கத்தை கட்சியை விட்டு நீக்கும்போது விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்தார்கள். கு.க.செல்வத்துக்கும் அதேபோல விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்த பின்னர் நடவடிக்கை எடுத்தார்கள்.

நான் பட்டியல் வகுப்பை சேர்ந்தவன் என்பதால் எந்த விதிமுறையும் பின்பற்றாமல் உடனடியாக நீக்கினார்கள். இதுபோல வேறு சமூகத்தை சார்ந்தவர் மீது சர்வாதிகாரமாக நடவடிக்கை எடுக்க முடியுமா?

பாஜகவில் என்னை மட்டு மல்ல... அனைவரையும் கண்ணியமாக நடத்துகிறார்கள். எல்.முருகன்பாஜகவுக்காக உண்மையாக உழைத்தார். அவரது உழைப்பை மதித்து, எவ்வித பின்புலமும் இல்லாவிட்டாலும், சாதி கண்கொண்டு ஒதுக்காமல் தலைவராக‌ ஆக்கி இருக்கிறார்கள். திமுகவில் அதை எல்லாம் எதிர்பார்க்க முடியுமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x