தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு; எஸ்.வி சேகர் வருத்தத்தை ஏற்றுக்கொள்கிறோம்: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு; எஸ்.வி சேகர் வருத்தத்தை ஏற்றுக்கொள்கிறோம்: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்
Updated on
1 min read

தேசியக்கொடி அவமதிப்பு வழக்கில், இனி ஒருபோதும் தன் வாழ்நாளில் தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் பேசமாட்டேன் என எஸ்.வி.சேகர் தெரிவித்த வருத்தத்தை ஏற்றுக்கொள்வதாக போலீஸார் தெரிவித்ததால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர். சிலைக்கு காவிப் போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவிச் சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்திருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் நடிகர் எஸ்.வி.சேகர் பதிவிட்ட வீடியோவில், காவியைக் களங்கம் எனக் குறிப்பிடும் தமிழக முதல்வர், தேசியக்கொடியில் அந்த நிறத்தைக் கிழித்துவிட்டு சுதந்திர தினக் கொடி ஏற்றப்போகிறாரா? எனக் கேள்வி எழுப்பி தேசியக்கொடியில் உள்ள மூன்று வர்ணங்களுக்கு பசுமை, தூய்மை, தியாகம் என்பதைத் தாண்டி புதிய விளக்கத்தையும் கூறியிருந்தார்.

தேசியக்கொடியை அவமதித்தும், தமிழக முதல்வரின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் காணொலி வெளியிட்ட எஸ்.வி.சேகருக்கு எதிராக சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், எஸ்.வி.சேகர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தேசியக்கொடியை அவமதித்ததாக வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யக்கூடும் என எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி.சேகர் மன்னிப்புக் கேட்டால் கைது செய்யமாட்டோம் என சென்னை போலீஸார் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து எஸ்.வி.சேகர், தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், தன் வாழ்நாள் முழுவதும் இனி ஒருபோதும் தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் உத்தரவாத மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி.சேகர் தெரிவித்த வருத்தத்தை ஏற்றுக்கொள்வதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கின் விசாரணையை செப்டம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்து, அதுவரை கைது செய்யக்கூடாது என்ற உத்தரவையும் நீதிபதி நீட்டித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in