

திமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்கும் துரைமுருகனுக்கும் பொருளாளராக பதவியேற்கும் டி.ஆர். பாலுவுக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (செப். 4) வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
"திமுகவின் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய பொறுப்புகளுக்கான வேட்பு மனு நேற்று (செப். 3) தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் பொறுப்புக்கு வேட்பு மனுவை துரைமுருகனும், பொருளாளர் பொறுப்புக்கு வேட்பு மனுவை நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலுவும் தாக்கல் செய்தனர். இந்த வேட்பு மனுக்களுக்கு மாற்றாக வேறு எவரும் தாக்கல் செய்யாததால் இவர்கள் இப்பொறுப்புகளுக்கு தேர்வு பெறுவது உறுதியாகி விட்டது.
திமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்பு என்பது தலைவருக்கு அடுத்த நிலையில் அதிக அதிகாரங்களைக் கொண்டதாகும். க. அன்பழகன் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பொறுப்பை தொடர்ந்து வகித்து பெருமை சேர்த்திருக்கிறார். அந்த பொறுப்பை ஏற்க இருக்கும் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகனை மனதார வாழ்த்துகிறேன்.
அதேபோல, பொருளாளராக பதவி ஏற்கும் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகிறேன்"
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.