கட்டாய கல்வி உரிமைச் சட்டம்: மாணவர்களுக்கான கல்வி செலவுத் தொகையை வழங்காதது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
1 min read

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி செலவுத் தொகையை வழங்காதது தொடர்பாக காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க, தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2016-17 ஆம் ஆண்டில், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் ஒரு மாணவருக்கு 25 ஆயிரம் ரூபாயை செலவுத் தொகையாக நிர்ணயித்து தமிழக அரசு வழங்கி வந்தது. இந்த தொகை, 2017-18 ஆம் ஆண்டில் 11 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டது.

இந்த மூன்று (2017-18, 2018-19, 2019-20) ஆண்டுகளில் மாணவருக்கான கல்விச் செலவை மறு நிர்ணயம் செய்யக் கோரியும், 2020-21 ஆம் ஆண்டுக்கு நியாயமான செலவை நிர்ணயிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒரு மாணவருக்கு அரசு சுமார் 32 ஆயிரம் ரூபாய் செலவிடும் நிலையில், தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு 11 ஆயிரம் என செலவு நிர்ணயித்தது தவறு என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மூன்று ஆண்டுகளுக்கான தொகையை ஆறு வாரங்களில் வழங்கும்படியும், அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். மேலும், கல்வி செலவுத் தொகையை குறைத்தது தொடர்பாக விளக்கமளிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று (செப். 4) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உத்தரவை அமல்படுத்த அரசு தரப்பில் மேலும் 4 வார அவகாசம் கேட்கப்பட்டது.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, ஏற்கெனவே இரு முறை அவகாசம் வழங்கியும் நிலுவை தொகையை வழங்காததை சுட்டிக்காட்டி, வழக்கை செப்டம்பர் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அன்றைய தினம் காணொலி காட்சி மூலம் ஆஜராக, பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in