கொடைக்கானலில் பெண் தீவைத்து தற்கொலை செய்துகொண்ட விவகாரம்: வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிட்டவர் கைது 

கொடைக்கானலில் பெண் தீவைத்து தற்கொலை செய்துகொண்ட விவகாரம்: வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிட்டவர் கைது 
Updated on
1 min read

கொடைக்கானல் மலைகிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது உடலில் தீ வைத்து தற்கொலை செய்துகொண்டதை மனிதாபிமானம் இன்றி வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிட்டவரை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப்பகுதி ஆடலூரை சேர்ந்த செல்வராஜ் மனைவி மாலதி(32). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சில ஆண்டுகளாக கணவன், மகனைப் பிரி்ந்து கே.சி.பட்டியை சேர்ந்த சதீஷ்(26) என்பவருடன் சேர்ந்து வாழ்ந்துவந்துள்ளார்.

இந்நிலையில் சதீஷ் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு தன்னை கைவிட்டதால் ஆத்திரமடைந்த மாலதி சதீஷ் வீட்டின்முன்பு உடலில் தீவைத்து சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார்.

மாலதி தனது சேலையில் தீ வைத்துக்கொள்வது முதல் தீ மளமளவென பற்றி எரிந்து தீக்காயங்களுடன் அலறியபடி மாலதி இறந்தது வரை இரண்டு நிமிடங்கள் அருகிலிருந்து ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இதை வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார்.

மாலதி தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய தாண்டிக்குடி போலீஸார் முன்னதாக தற்கொலைக்கு தூண்டியதாக சதீஷ் என்பவரை கைது செய்தனர்.

இந்நிலையில் மாலதியைக் காப்பாற்ற முயலாமல் மனிதாபிமானமின்றி வீடியோ எடுத்து வலைத்தளத்தில் பதிவிட்டவர் குறித்து விசாரித்த போலீஸார் வீடியோ எடுத்து வெளியிட்ட சதீஷின் சகோதரர் சரவணக்குமாரையும் இன்று கைது செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in