

எம்பிசி இடஒதுக்கீட்டில் மருத்துவர், வண்ணார், குலாளர் உள்ளிட்ட சமூகத்தினருக்கு 7 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு மருத்துவர் சமுதாய பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவர் சமுதாய பேரவையின் மாநில தலைவர் வெ.பழனி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொருளாதாரத்திலும், கல்வி,வேலைவாய்ப்பிலும் முன்னேற்றம் அடையாத பாரம்பரிய தொழில்சார்ந்த சமுதாயங்களான மருத்துவர், வண்ணார், குலாளர், ஒட்டர், மீனவர், வலையர், குரும்பர், நரிக்குறவர் உள்ளிட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் (எம்பிசி) உள்ளனர். மக்கள்தொகை குறைவாக இருப்பதால் அவர்களால்இடஒதுக்கீடு பலனை பெறமுடியாத நிலை இருந்து வருகிறது. மக்கள்தொகை அதிகமாக உள்ளசமுதாயத்தினரோடு அவர்களால் போட்டியிட இயலவில்லை. எனவே, அவர்களுக்கு தனி ஒதுக்கீடாக 7 சதவீதம் அளித்தால் கல்வி, வேலைவாய்ப்பு பெற உதவியாக இருக்கும்.
சமுதாயத்தில் கீழ்நிலையில் உள்ள இந்த சமுதாயத்தினருக்கு 7 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குமாறு தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம். எங்கள் கோரிக்கையை சட்டப் பேரவையில் வைத்து நிறைவேற்றித்தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடுகுறித்து தமிழக அரசே முடிவுசெய்து கொள்ளலாம் என்று நீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ள நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி உள்ஒதுக்கீடு பெற்றுத்தருமாறு வேண்டுகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.