தஞ்சாவூர் அருகே தனியார் வங்கி முன்பு தீக்குளித்து இறந்த தொழிலாளியின் கடன் நிலுவை ரூ.6.94 லட்சம் தள்ளுபடி: ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் வங்கி நிர்வாகம் உறுதி

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாசலில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற ஆனந்த்தின் மனைவி, குழந்தைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாசலில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற ஆனந்த்தின் மனைவி, குழந்தைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.
Updated on
1 min read

தஞ்சாவூர் அருகே தனியார் வங்கி முன்பு தீக்குளித்து இறந்த வெல்டிங் தொழிலாளியின் கடன் நிலுவை ரூ.6.94 லட்சத்தை தள்ளுபடி செய்து, அவரது குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வங்கித் தரப்பில் நேற்று உறுதியளிக்கப்பட்டது.

தஞ்சாவூர் அருகே வல்லம் வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் ஆனந்த்(40). வெல்டிங் தொழிலாளி. வல்லத்தில் உள்ள தனியார் வங்கியில் ரூ.9 லட்சம் வீட்டுக் கடன் பெற்றிருந்த இவர், நிலுவை தொகை ரூ.6,94,287-ஐ நீண்ட நாட்களாக செலுத்தாமல் இருந்ததால் அவரது வீட்டை ஏலம் விடப்போவதாக வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அளித்தது.

இதையடுத்து, கடந்த 27-ம் தேதி வங்கிக்குச் சென்ற ஆனந்த், குறிப்பிட்ட தொகையை செலுத்துவதாகவும், அதுவரை ஏல நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறு தெரிவித்தும், அதை அதிகாரிகள் ஏற்கவில்லை. இதனால் விரக்தியடைந்த ஆனந்த் வங்கி முன்பு தீக்குளித்தார். அவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இதையடுத்து, “வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’’ எனக் கூறி உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 3 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களுடன் தஞ்சாவூர் கோட்டாட்சியர் வேலுமணி, டிஎஸ்பிக்கள் சீதாராமன், பாரதிராஜா மற்றும் வங்கி அலுவலர்கள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வீட்டுக்கடன் நிலுவை ரூ.6,94,287-ஐ தள்ளுபடி செய்வதாகவும், ஆனந்த் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் தருவதாகவும் வங்கித் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in