பணியின் போது லாரி மோதி உயிரிழந்த காவலர்; குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
Updated on
1 min read

பணியின் போது லாரி மோதி உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆக.30) வெளியிட்ட அறிக்கை:

"திருப்பூர் மாவட்டம், காங்கேயம்-சென்னிமலை மாநில நெடுஞ்சாலையில் திட்டுப்பரை என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், சென்னிமலையிலிருந்து காங்கேயம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியை நிறுத்த முற்பட்ட போது, லாரி ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் செல்வதை அறிந்த ஆயுதப்படை காவலர் பிரபு இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்று, லாரியை நிறுத்த முற்பட்டபோது, லாரி ஓட்டுநர் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் காவலர் பிரபு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

பணியின் போது உயிரிழந்த ஆயுதப்படை காவலர் பிரபுவை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆயுதப்படை காவலர் பிரபுவின் குடும்பத்திற்கு சிறப்பினமாக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்து லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்"

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in